முத்துராசுக்கு என்னாச்சு.. செய்றதையும் செஞ்சுட்டு சந்திரமுகி ஜோ மாதிரி அமைதியா நிக்குறீங்களே அம்மணி!
பரபரப்பாக நகர்ந்து வரும் நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் முத்துராசுவைக் கொன்றது யார் என்பது இந்தக் காட்சிகளைப் பார்த்தாலே தெரியும்.
சென்னை: 'கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார்?' என்ற கேள்விக்குப் பிறகு இப்போது சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்படும் கேள்வி, 'முத்துராசுவைச் சுட்டது யாரு?' என்பது தான்.
யாருப்பா அந்த முத்துராசு எனக் கேட்கிறீர்கள் என்றால், நிச்சயம் இந்த கட்டுரையைப் படிப்பதற்கு நீங்கள் தகுதியானவர் இல்லை. ஏனென்றால் ரத்தம், சதை, நரம்பு என எல்லாவற்றிலும் சீரியல் ஊறிப் போனவர்களுக்கு நிச்சயம் முத்துராசுவை நன்றாகத் தெரியும். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் அவர் பண்ணும் வில்லத்தனமும் தெரிந்திருக்கும்.
மாயனின் கடைசித் தங்கை ஐஸ்வர்யாவை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதோடு, அவரைப் படாதபாடு படுத்தி வந்தவர்தான் இந்த முத்துராசு. உட்சபட்சமாக ஐஸ்வர்யாவின் ஆபாசப் படங்களைக் காட்டி அவர் மிரட்ட, சீரியல் பரபரப்பானது. டிஆர்பியும் எகிறியது.
யாருங்க சுட்டது?
கடந்த வாரமே அவரை யாரோ துப்பாக்கியால் சுடுவது மாதிரியான காட்சிகளை நைசாக புரொமோவில் கோர்த்து விட்டு விட்டார் புத்திசாலி இயக்குநர். இதனால் அப்போதே, 'முத்துராசுவை சுட்டது யாரு?' என கேள்வி சமூகவலைதளங்களில் பற்றி எரியத் தொடங்கியது. 'நீ இருக்கியா.. இல்ல சுட்டு கொன்னுட்டாங்களா?' என்ற ரேஞ்சுக்கு மீம்ஸ்களும் வைரலாகின.
ஜகா வாங்கிய நடிகர்கள்
நாம் இருவர் நமக்கு இருவர் நடிகர்களின் சமூகவலைதளப் பக்கங்களில் எல்லாம் இந்தக் கேள்வி தான் நிறைந்திருந்தது. பொசுக்கென போட்டுடைக்க அவர்கள் என்ன முட்டாள்களா... 'எங்களுக்கே தெரியாது பாஸ்' என நைசாக அவர்களும் ஜகா வாங்கிக் கொள்ள, பைத்தியம் பிடிக்காதக் குறையாக இந்தக் கேள்விக்கு பதிலைத் தேடி வருகின்றனர் நாம் இருவர் நமக்கு இருவர் 2 ரசிகர்கள்.
இன்ஸ்பெக்டர் வருகை
எப்படியும் இந்த வாரமும் இதற்கான பதிலை சொல்ல மாட்டார்கள் போல.. அது இந்த வார புரோமோவிலேயே தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இந்த வழக்கை விசாரிப்பதற்காக புதிதாக ஒரு போலீஸ் கேரக்டர் வேறு அறிமுகமாகிறது. நிச்சயம் அவர் விசாரணை என்ற பேரில் ஒரு சில வாரங்களை இழுத்து விடுவார் என்பது உறுதி.
இன்றைய எபிசோட்
இது ஒருபுறம் இருக்க, இன்றைய எபிசோட்டின் சில காட்சிகள் சமூகவலைதளத்தில் வெளியாகி இருக்கிறது. அதில், தன் மகன் முத்துராசுவைக் காணோம் என அவரது அம்மா ஒரு பக்கம் ஊரைக் கூட்ட, காலிங்பெல்லை அடித்து ஐஸ்வர்யாவின் பலான வீடியோ உள்ள செல்போனை யாரோ வீட்டு வாசலில் வைத்து விட்டுச் சென்று விடுகின்றனர்.
மாயனின் மைண்ட்வாய்ஸ்
முத்துராசுவின் அம்மா தன் மகனைக் காணவில்லை என சண்டை போடும் போது, மாயன் தான் மைண்ட்வாய்ஸில் அதிகம் பேசுகிறார். இதனால் அவர் முத்துராசுவைக் கொன்றிருக்க வாய்ப்பில்லை எனச் சொல்லாமல் சொல்லி விடுகிறார் இயக்குநர். கத்தியும் அதே மாதிரி தான். எனவே, அவர்கள் இருவரையும் நம் சந்தேக வட்டத்தில் இருந்து வெளியில் தூக்கி விடலாம்.
சந்தேக லிஸ்ட்
ஐஸ்வர்யா தான் முத்துராசுவைக் கொன்றார் என்றால், இப்படி செல்போனைக் கொண்டு வந்து வீட்டு வாசலில் வைத்து காலிங்பெல்லை அடிக்க வாய்ப்பில்லை. எனவே அவரையும் சந்தேக வட்டத்திலிருந்து வெளியேற்றி விடலாம். சோ, மீதமிருப்பவர்கள் ஐஸுவின் அம்மா, அக்கா சரண்யா மற்றும் மகா தான். அதிலும் மகாவுக்கு தான் இதில் வாய்ப்புகள் அதிகம் என்பது போல் காட்சிகள் உள்ளது.
யாரும் எதிர்பார்க்காத டிவிஸ்ட்
ஆனால் இந்த இடத்தில் தான் இயக்குநர் மிகப்பெரிய டிவிஸ்ட் வைக்கப் போகிறார் என்பது நமது யூகம். சந்திரமுகி படத்தில் யாருக்கு பேய் பிடிச்சிருக்கு என குடும்பமே தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கும் போது, சமத்துப் பிள்ளையாக நடித்து கடைசியில் ஷாக் கொடுப்பாரே ஜோ. அதுபோல் இந்தச் சீரியலில் காயத்ரி தான் முத்துராசுவைக் கொன்றிருக்க வேண்டும் என நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன (அப்டிச் சொல்லித் தான் எஸ்கேப் ஆகணும் பாஸ்)
சைலண்ட் காயத்ரி
சீரியலில் ஊமக்கொட்டான் என செல்லமாக அழைக்கப்படும் காயத்ரிக்கு ஏற்கனவே தனது தங்கையின் வாழ்க்கை முத்துராசுவிடம் சிக்கிக் கொண்டதே என்ற கோபம் உள்ளது. முத்துராசுவைத் தானே கட்டியிருந்தால், ஐஸுவின் வாழ்க்கை சீரழிந்து இருக்காது என சிந்திப்பவர். தங்கைக்காக தன் வாழ்க்கையையே பணயம் வைக்கத் தயாராக இருப்பவர்.
வாய்ப்புகள் அதிகம் பாஸ்
இதற்கெல்லாம் மேலே, 'உனக்கேன் இந்த அக்கறை?' எனக் கேட்டால், 'நானே பாதிக்கப்பட்டேன்..' என பராசக்தி சிவாஜி ரேஞ்சுக்கு முத்துராசுவால் கொடுமைகளை அனுபவித்தவர் காயத்ரி. ஐஸுவைத் திருமணம் செய்த பிறகும், முத்துராசு தொடர்ந்து காயத்ரியை பாடாய்படுத்தியது ஊரறிந்த கதை தான். எனவே தனக்காகவும், தன் தங்கைக்காகவும் சேர்த்து, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என நிச்சயம் அவர் முத்துராசுவைக் கொலை செய்திருக்க வாய்ப்புகள் அதிகம்.
இதுதான் முதல் சந்தேகம்
சரி, இப்போது நமது யூகத்திற்கான காரணங்களைப் பார்ப்போம். ஐஸு காலிங்பெல் அடித்ததும் கதவைத் திறந்து, அந்தக் கடிதத்தைப் படித்துக் கொண்டிருக்கும் போது, இதற்குத் தான் காத்திருந்தேன் என்பது மாதிரி வந்து அட்டண்டெண்ட்ஸ் போடுகிறார் காயத்ரி. ஜீன்ஸ் படத்தில் முந்தைய ஸ்டேஷனில் ஏறி, பிரெஷ்ஷாக அடுத்த ஸ்டேஷனில் இறங்குவாரே ஐஸ்வர்யா ராய். அதுமாதிரி, முன்பக்கம் செல்போனை வைத்து விட்டு, கொல்லைப்புற வாசல் வழியாக உள்ளே சென்று திரும்ப வாசலுக்கு வருவது போல் இருக்கிறது காயுவின் காட்சிகள்.
அமைதி.. அமைதியோ அமைதி
காயுவை நாம் சந்தேகப்படுவதற்கு இன்னமும் காரணங்கள் இருக்கின்றன. செல்போனை எடுத்துக் கொடுத்தவர்களுக்கு நன்றி என ஐஸு அழுகும் காட்சிகளில், மாயன், கத்தி, ஐஸுவின் அம்மா, சரண்யா என எல்லோரும் ஏதேதோ சமாதானம் சொல்ல, காயத்ரி மட்டும் அமைதியாக நிற்கிறார். இப்போது ஏதாவது பேசினால் பிளாஷ்பேக் காட்சிகளில் லாஜிக் இடிக்கும் என இயக்குநர் அவரை அமைதியாக நிற்க வைத்து விட்டார் போலும்.
எங்கயோ இடிக்குதே..
கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதற்கும், காயத்ரி பேசுவதற்கும் அதிக வித்தியாசமில்லை என்பதே அவர் மீதான சந்தேகம் மேலும் வலுக்க ஒரு காரணம். ஐஸ்வர்யா அந்த செல்போனை என்ன செய்வது என சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே, அதிரடியாக அதை தீயிட்டுக் கொளுத்தி விடுகிறார் காயத்ரி. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது காயத்ரி தான் முத்துராசுவைச் சுட்டிருக்க வேண்டும் எனத் தெரிகிறது.
வெயிட் அண்ட் ஸீ மக்களே
பெரும்பாலான திரில்லர் படங்களில் படம் முழுக்க அமைதியாக, யாருமே சந்தேகிக்க முடியாதபடி வளைய வரும் கேரக்டர்கள்தான் கிளைமாக்ஸில் மாபெரும் டிவிஸ்ட் தருபவர்களாக இருப்பார்கள். அந்த பார்முலாப்படி பார்த்தால், நிச்சயம் காயத்ரி தான் முத்துராசுவைக் கொன்றிருப்பார் என நம்பலாம். அவர் எப்படி முத்துராசுவைக் கொன்றார், உண்மையில் அன்று என்ன நடந்தது என்பதையெல்லாம் இயக்குநர் தன் இஷ்டப்படி கண், காது,மூக்கு எல்லாம் வைத்து காட்சிகளாகச் சொல்லுவார். அதுவரை வெயிட் அண்ட் ஸீ மக்களே...!