நம்ம ஊரு கலர்னு சொல்லி ஜெயிச்சுட்ட கலர்ஸ் தமிழ் சானல்!
சென்னை: வடக்கில் இருந்து தெற்கிற்கு வந்த ரிலையன்ஸ் சானல் என்று சொல்லப் படுகிறது கலர்ஸ் தமிழ் டிவி.
வரும்போதே நம்ம ஊரு கலரு என்று தமிழகத்தில் தடம் பதித்தது. நம்ம ஊரு மாதிரி எல்லாமும் இல்லை என்றாலும் நம்ம ஊர் மக்கள் சானலை ஏற்றுக் கொண்டார்கள்.
இப்போது சன், விஜய், ஜீ தமிழ் டிவிக்கு அடுத்த படியாக கலர்ஸ் தமிழ் டிவி இருப்பது உண்மைதான்.
மாப்பிள்ளை ஆர்யா
கலர்ஸ் தமிழ் டிவி ஆரம்பித்த புதிதில் நம்ம வீட்டு மாப்பிள்ளை என்று நடிகர் ஆர்யாவை வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தினார்கள். எந்த தமிழ் குடும்ப பெண்களையும் இப்படி தங்கள் வீட்டு பெண்களை சினிமா நடிகருக்கு ஒத்திகை பார்க்க அனுப்பி வைத்து வேடிக்கை பார்க்க மாட்டார்கள்.
சானல் தவறு
அந்த தவறை கலர்ஸ் தமிழ் டிவி செய்தது. அந்த தவறை தமிழ் மக்கள் மன்னித்து சானலை ஏற்றுக் கொண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மக்களுக்கு கலர்ஸ் தமிழ் டிவியின் இது நம்ம ஊரு கலரு என்கிற வாசகத்தின் மீது அளவு கடந்த நம்பிக்கை இருந்தது. அதுதான் அவர்கள் நடிகர் ஆர்யாவின் அந்த நிகழ்ச்சியை மன்னிக்க காரணம்.
போதும் பொண்ணு
பேரழழி சீரியலில் போதும் பொண்ணு என்கிற ஒரு கதாபாத்திரத்தை வைத்து ரொம்ப யதார்த்தமாக கதையை கொண்டு சென்று இருந்த விதமும் சீரியல் ஆர்வலர்களுக்கு பிடித்து போய் தொடர்ந்து சீரியலை பார்க்க ஆரம்பித்து இருந்தார்கள்.
குப்பத்து பொண்ணு
அடுத்து ஓவியா சீரியலில் குப்பத்து பொண்ணு கதாபாத்திரம் சீரியல் ஆர்வலர்களை கவர்ந்தது. இப்படி மக்களின் நாடி பார்த்து சீரியல் எடுத்த கலர்ஸ் தமிழ் டிவி மக்களின் நாடி பிடித்து ஷோக்களையும் வழங்க துவங்கியது நாகினி போன்ற டப்பிங் சீரியலையும் ஒளிபரப்பத் துவங்கி மக்களின் மனதில் ஒரு நிலையான இடத்தைப் பிடித்துள்ளது.
கல்லாப்பெட்டி கோடீஸ்வரி
கல்லாப்பெட்டி, கோடீஸ்வரி என்று புதுப்புது நிகழ்ச்சிகளை வழங்கி மக்களின் மனதில் நிலையான இடத்தைப் பிடிக்க முயற்சித்து வரும் கலர்ஸ் தமிழ் டிவி, இன்னும் இன்னும் என்று நல்ல நிகழ்ச்சிகளை வழங்கி தொலைக்காட்சி ரசிகர்களின் உள்ளங்களை அள்ளினால் சரிதான்.