எங்கும்... எப்போதும்... மக்கள் சாய்ஸில் செய்தி சானல்கள்.. நம்பர் 1!
இந்தியா: இந்தியா முழுவதிலும் மக்கள் செய்தி சானல்களையே அதிகம் பார்த்து வருகின்றனர் என்று கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. கோவிட் 19 தொற்று லாக்டவுன் காரணமாக மக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.
இந்த நேரத்தில் ஆரம்பத்தில் டிவியில் அனைத்து கேளிக்கை நிகழ்ச்சிகளையும் ஆவலுடன் பார்த்து வந்த மக்கள், இப்போது தொலைக்காட்சி சானல்களில் படங்கள்.. மற்ற பழைய நிகழ்ச்சிகள் பார்த்து சலிப்படைந்து உள்ளனர் என்றும் அந்த கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
விடுமுறை நாட்களில் டிவி ரிமோட் எப்போதும் குழந்தைகள் கையில் இருக்கும். இப்போது குழந்தைகள் டிவி ரிமோட்டை சட்டை செய்வதில்லை. போனில் வீடியோக்கள் பார்ப்பது கேம்ஸ் விளையாடுவது என்று குழந்தைகள் கவனம் திரும்பி விட்டது.
லாக்டவுன் 2.O
ஆரம்பத்தில் முதல் 21 நாட்கள் லாக்டவுன்..அடுத்து அதைத் தொடர்ந்து மீண்டும் மே 3 வரை லாக்டவுன் என்று இரண்டாவது முறை லாக்டவுனை மத்திய அரசு அறிவித்தது. இந்த இரண்டாவது முறை லாக்டவுன் அமலை லாக்டவுன் 2.ஓ என்று சொல்கிறார்கள். லாக்டவுன் அல்லது லாக்டவுன் 2.ஓ வில் இது நடந்தது என்று தெளிவாக சொல்லி விளக்க லாக்டவுன் அமலை இரண்டாகப் பிரித்துக் கூறுகின்றனர்.
குழந்தைகள் பெரியவர்கள்
தொலைக்கட்சி நிகழ்ச்சிகள் புதிதாக ஒன்றும் இல்லை. ஏற்கனவே ஒளிபரப்பான நிகழ்ச்சிகள், அடிக்கடி ஒளிபரப்பான திரைப்படங்கள்...மறு ஒளிபரப்பில் சீரியல்கள் என்று இன்றைய தொலைக்காட்சிகளின் நிலை இருக்கிறது. இதனால் போரடித்து சலிப்பில் இருக்கும் மக்கள் டிவியையே தவிர்த்து, குடும்பமாக உட்கார்ந்து கார்ட்ஸ், தாயம், ஆடு புலி ஆட்டம் விளையாடுவது என்கிற நிலை லாக்டவுன் 2.ஓ வில் அதிகரித்து உள்ளது.
மேல்தட்டு மக்கள்
சமுதாயத்தில் நல்ல வசதிகள் உடைய மேல்தட்டு மக்கள் ஆன்டிராய்டு போனில் ஓடிடி இயங்கு தளத்தில் தங்களுக்கு விருப்பமானதை... பிடித்ததை பார்த்து வருகிறார்கள்.அவ்வப்போது இவர்கள் இணையத்திலேயே செய்திகளையும் பார்த்து விடுகிறார்கள்.
செய்தி சானல்கள்
லாக்டவுன் காலத்தில் எப்போதும் மவுசில் இருப்பது செய்தி சானல்கள்தான். அதன் படி வீட்டில் தொலைக்காட்சிகளில் செய்திகள் பார்ப்பவர்கள் சதவிகிதம் என்பது மட்டும் ஆரம்பத்தில் இருந்தே குறையாமல் கணிசமான அளவில் அதிகரித்துதான் வருகிறது என்று அந்த கணக்கெடுப்பு சொல்கிறது. இப்போதைக்கு தினமும் புதுப்புதுத் தகவல்கள் செய்தி சானல்களில்தான் கிடைக்கின்றன என்பதால்தான் மக்களின் முழுக்கவனமும் செய்தி சானல்கள் பக்கம் திரும்பி உள்ளது என்று அந்த கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.