அவசர கால சீரியல் ஷூட்டிங்கில் எல்லாமே மாறிப் போச்சுங்க!
சென்னை: தொலைக் காட்சிகளில் தினமும் சீரியல்கள் என்று காலம் மாறிப்போச்சு. ஒரு சீரியல் மட்டும் இல்லாமல், நடிகர் நடிகைகள் பல சீரியல்களில் நடித்து ரொம்ப பிசியாக இருக்கும் காலம்.
இந்த மாதிரி காலக் கட்டத்தில் நடிகர் நடிகைகளுக்கு டயலாக் எழுதி அவர்களுக்கு சொல்லிக் கொடுத்து, பேப்பரை கையில் வச்சு மனப்பாடம் செய்து உணர்ச்சிப் பூர்வமாக நடிங்க என்று சொல்ல யாருக்கும் நேரமில்லை.
அந்த அளவுக்கு டயலாக் காபி ரைட் எடுக்க ஆட்களும் இல்லை. எழுதுபவர் ஒருவர், அதை ஒரே ஒருவர் கையில் வைத்துக்கொண்டு, அக்காட்சிக்கு யார் யார் நடிக்கிறார்களோ அவர்களுக்கு ஆன் தி ஸ்பாட் ப்ராம்ப்டடிங் கொடுத்து பேச வைத்து ஷூட் செய்வதுதான் இன்றைய நிலை.
தேவையில்லை தமிழ்
பிராம்ப்டிங் முறை அமலில் இருக்கும் இந்த நிலையில்தான் நடிக்கும் யாருக்கும் தமிழ் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. படங்கள் என்று மட்டும் இல்லாமல் ரொம்ப தைரியமாக அசால்டாக எந்த மாநிலத்தில் இருந்து வேண்டுமானாலும் நடிகர் நடிகைகளை தொலைக்காட்சித் தொடர்களுக்கும் நடிக்க அழைத்து வந்துவிடுகிறார்கள்.
டிவி இண்டஸ்ட்ரி
இப்போது தொலைக்காட்சி இண்டஸ்ட்ரியிலும் தமிழ் பேசும் நடிகைகள் அதிகம் நடிக்க வந்து இருந்தாலும், அவர்களுக்கும் பிராம்ப்டிங் முறைதான். கண்மணி சீரியலில் நடிக்கும் சீனியர் நடிகர் சஞ்சீவுக்கு கூட பிராம்ப்டிங்தான். அவர்கள் கையில் டயலாக் பேப்பர் கொடுத்து அவர் அதை படித்து நடிக்க தயாராக இருந்தாலும், ஒரு காபி ரைட் எழுதிக் கொடுக்க கூட இன்று ஆட்கள் இல்லை.
ஷூட்டிங் ஸ்பாட்
சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் சென்று பார்த்தால், அந்த காட்சிக்குத் தேவையானவர்கள் கேமிரா முன்னால் நிற்பார்கள். அதற்கடுத்த காட்சியில் நடிக்க உள்ளவர்கள் ரொம்ப ரிலாக்ஸா போன் பேசிக்கொண்டு இன்னும் சில பேர் படுத்து தூங்கிக் கொண்டு கூட இருப்பார்கள். ஷாட் ரெடின்னா உடனே கேமிராவுக்குப் பின்னால் இருந்து உதவி இயக்குநர் டயலாக் சொல்ல சொல்ல இவர்கள் பேசி நடித்து விட்டு மிக எளிமையாக காட்சியைஷூட் செய்து அனுப்பி விடுவார்கள்.
மேடை நாடகங்களில்
இப்போது 100 சதவிகிதம் மேடை நாடகங்களில் மட்டும்தான் டயலாக் மனப்பாடம் செய்து டைமிங் படி பேசி நடிக்க வேண்டும். இதற்கு மட்டும் வேறு ஆப்ஷன் இல்லவே இல்லை. இதில் நடித்து விட்டு சினிமாவுக்கு வரும் நடிகர்களுக்கும் பிராம்ப்டிங் அவ்வளவாகத் தேவை இருக்காது. ஒரு முறை டயலாக்கை படித்து காட்டுங்கள் என்று காதில் வாங்கிக்கொண்டு பேச ஆரம்பித்து விடுவார்கள்.