என்னை கண்டிக்கும் உரிமை ஒரே ஒருத்திக்குத்தான்.. ஐ.லியோனி
சென்னை: ஜீ தமிழ் டிவியின் தமிழா தமிழா ரியாலிட்டி ஷோவில் சிறப்பு அழைப்பாளராக பட்டிமன்ற நடுவர் புகழ் திண்டுக்கல் ஐ.லியோனி கலந்துக்கொண்டு இருக்கிறார். இதில் திருமணத்துக்கு பின்னர் வந்த உறவுகள் பற்றிய விவாதம் குறித்து கருத்து கூறி இருக்கார் இவர்.
இந்த நிகழ்ச்சியில் பலர் திருமணத்துக்கு பின் வந்த உறவுகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளனர். அதில் ஒருவர் தம்பி வீட்டுக்கு போக முடியலை, தங்கச்சிக்கு போன் செய்து பேச முடியலை.. காரணம் பொண்டாட்டி தொல்லை என்று கூறி இருப்பது பலரையும் ஆமாம் போட வைத்துள்ளது.
இந்த ரியாலிட்டி ஷோவை இயக்குநர் கரு.பழனியப்பன் தொகுத்து வழங்கி இருக்கார். வழக்கம் போல் இந்த வாரத்துக்கு உண்டான விவாதமும் அருமையாகத்தான் இருக்கிறது. நாளை இரவு 9:30 மணிக்கு ஜீ தமிழ் டிவியைப் பார்த்தால் தெரியும்.
மனைவி பாசமா தாய் பாசமா
மகிழ்ச்சி உண்மையிலேயே உங்கள் வாழ்வில் திருமணத்துக்கு முன்பு இருந்ததா, திருமணத்துக்கு பின்பு இருந்ததா என்று கரு. பழனியப்பன் திண்டுக்கல் லியோனியிடம் கேட்டபோது அவர் பலரும் விரும்பும் படியான பதிலை கூறி உள்ளார். எல்லாரும் ஆவலோடு எதிர்பார்க்கும் இந்த கேள்விக்கான பதிலாக அவர் என்ன கூறி இருப்பார்? என்ன இருந்தாலும் பட்டி மன்ற பேச்சாளர் ஆயிற்றே..! அவர் உண்மையை கூறுவாரா என்கிற சந்தேகம் வேண்டாம்.. பதிலை பாருங்கள்.
விஜய் டிவி புகழ்
திண்டுக்கல் ஐ. லியோனி பழைய பாடல்களா, புதிய பாடல்களா என்கிற பேசிக்கில் பல விவாதங்களை வைத்து, பட்டிமன்றம் நடத்தி புகழப்பெற்றவர். அந்த நிகழ்ச்சியில் பல பாடல்களையும் பற்றி நாம் நகைச்சுவையாகவோ, அல்லது சிந்திக்கும்படியோ பல கருத்துக்களை அறிய முடியும். இவரின் இந்த கலாட்டாவான மற்றும் அர்த்தமுள்ள பல கருத்துக்களை பகிரும் பட்டிமன்றத்துக்கு வெளி நாடுகளில் இருந்தும் அழைப்பு வந்து அங்கும் தனது புகழை நிலை நாட்டி இருப்பவர். ஆரம்பத்தில் விஜய் டிவியில்தான் இவர் இந்த நிகழ்ச்சியை நடத்தி பிரபலம் ஆனார். இப்போது கலைஞர் தொலைக்காட்சியில் அவ்வப்போது சிறப்பு பட்டிமன்றம் நடத்தி வருகிறார்.
தாய்ப்பாசம் பரவசம்
அது சரி, கரு. பழனியப்பன் கேள்விக்கு இவர் அளித்து இருக்கும் பதிலை பார்ப்போம். ஒரு கல்யாணத்துக்கு போயி இருக்கோம்னு வச்சுக்கோங்க. அங்கே நமது தாயும், மனைவியும் வந்து சேர்ந்து உட்கார்ந்து இருக்கிறார்கள். அப்போது நான் நடந்து போகும்போது திடீரென்று எதாவது தடுக்கி தடுமாறி நின்றால், ஐயையோ.. என்னப்பா ஆச்சு.. பெரிசா அடி ஒண்ணும் பட்டுடலையே என்று தாய் கேட்பார். தாய்ப்பாசம் பரவசமானது.
கண்ணு முதுகிலேயா?
ஆனால், மனைவி ரியாக்ஷன் என்னவாக இருக்கும்... பார்த்து போகப்படாதா? கண்ணு என்ன முதுகிலேயா வச்சு இருக்கீங்க.. உங்களை எல்லாம் எப்படித்தான் அமெரிக்கா, கனடா என்று பேசக் கூப்பிடுறாங்களோ தெரியலைன்னு சொல்வாங்க என்று கூறிய ஐ.லியோனி, ஆனாலும் உலகத்திலேயே என்னை கண்டிப்பது மனைவி மட்டும்தான். அந்த உரிமை மனைவிக்கு மட்டும்தான் இருக்கிறது என்று கூறினார்.