மண்பானை பொங்கலோ... குக்கர் பொங்கலோ... படையல் சூரியனுக்குத்தானே
பொங்கல் எந்த பாத்திரத்தில் வைத்தாலும் தலைவாழை இலை போட்டு படைப்பது சூரியனுக்குதானே. இதை யாராலும் மறுக்க முடியாது.
சென்னை: சன்டிவியில் பட்டிமன்றத்தின் முன்னோட்டமே சுவாரஸ்யமாக இருந்தது. ஆர் கே நகரில் குக்கரில் வைத்த பொங்கல் மணமணக்கிறது.
பொங்கல் பண்டிகை வந்தாலே உற்சாகம்தான். பச்சரிசி, வெல்லம் போட்டு நெய் ஊற்றி கூடவே வறுத்த முந்திரி கிஸ்மிஸ் பழம் போட்டு சமைத்து சாப்பிடுவது தனி சுவை. கூடவே தொலைக்காட்சி சேனல்களில் சிறப்பு நிகழ்ச்சிகளும்தான்.
பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம் இல்லாத சிறப்பு நிகழ்ச்சியா? பொங்கலோ, தீபாவளியோ டிவியில் பட்டிமன்றம் பார்ப்பதே உற்சாகம்தான்.
சத்யா பொங்கல்
சன்டிவியில் நந்தினி, தெய்வமகள் குடும்பம் இணைந்து நட்சத்திர பொங்கல் வைக்கிறார்கள். ஆட்டம், பாட்டம், அமர்களம்தான். சீரியலில் எலியும், பூனையுமாக அடித்துக்கொள்ளும் அண்ணியாரும் சத்யாவும் பொங்கலை உற்சாகமாக கொண்டாடப் போகிறார்கள்.
இட்லி, தோசைக்கு லீவு
தாசில்தார் சத்யாவிற்கு ரொம்ப பெரிய சந்தேகம். பொங்கலுக்கு லீவு விடுறாங்க. இட்லி தோசைக்கு லீவு இல்லையே ஏன்? என்று கேட்கிறார். இதற்கு யார் பதில் சொல்லப்போகிறார்களோ.
ஆர்.கே நகர் டோக்கன்
பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையிலான பட்டிமன்றத்தில் கலகலப்பு கூடுதலாகவே இருக்கிறது. நோட்டா கொடுத்தாங்க டோக்கனை கொடுத்தாங்க... நோட்டையே டோக்கனா கொடுக்கிற காலம் வந்திருச்சி என்று பாரதி பாஸ்கர் சொல்ல சிரிப்பலைதான்.
குக்கர் பொங்கல்
ஏன் குக்கரில் பொங்கல் வைக்கிறீங்க என்று கேட்டால், அதுதானே கொடுத்தாங்க என்று ஆர்.கே. நகர்வாசி ஒருவர் சொல்ல, அதற்கு பேச்சாளர் ராஜாவோ, குக்கர் பொங்கலோ, மண்பானை பொங்கலோ, இலையில் படையல் போடுவது என்னவோ சூரியனுக்குத்தானே என்று ஒரே போடாக போட்டார். கை தட்டல் அடங்க அதிக நேரமானது. இது முன்னோட்டம்தான். பொங்கல் நாளில் முழு பட்டிமன்றத்தையும் பார்க்கலாம்.