மக்கள் எங்கே பார்த்தாலும் எம்ஜிஆர் லதான்னுதான் கூப்பிடறாங்க!
சென்னை: சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் நடிகை லதா கலந்துக்கொண்டார். அதாங்க... எம்ஜிஆர் லதா.இவரை மக்கள் எங்கு பார்த்தாலும், ஏன் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் பார்த்தாலும் கூட எம்ஜிஆர் லதான்னுதான் கூப்பிடறாங்களாம்.
இது தனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது..எம்ஜிஆர் லதான்னு பேர் நிலைச்சு போச்சு.. இது எனக்கு மகிழ்ச்சிதான் என்று கூறினார் லதா.எம்ஜிஆர்தான் எனக்கு குரு, வீட்டை விட்டு எங்கவாது வெளியில் போனால் எப்படி சாமி கும்பிட்டுட்டு போவோமோ அப்படி தனது குருநாதரையும் வணங்கிவிட்டு வெளியில் செல்வேன் என்றும் லதா கூறினார்.
நடிப்பேன் என்று துளி கூட நினைச்சு பார்த்ததில்லை என்றும், ஆனால், பெரியம்மா இந்தியில் நடிகையாக இருந்தார்கள் என்றும் கூறிய லதா, பெரியம்மாவைப் பார்த்து தானும் டான்ஸ் ஆடுவது, பள்ளியில் டிராமாக்களில் நடிப்பது என்று ஆர்வத்துடன் பங்கேற்றதாகவும் கூறினார்.
கலந்து இருந்த புகைப்படம்
எம்ஜிஆர் சார் உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு ஹீரோயின் தேடிக்கொண்டு இருந்தபோது, ஆர்.எஸ். மனோகர் சார் நாடக குழு புகைப்படங்களில் எனது புகைப்படமும் கலந்து இருந்திருக்கிறது. எப்படி கலந்தது என்று எங்களுக்கே தெரியாது. பள்ளியில் டான்ஸ் ஆடிய படம் ஒன்று கலந்து இருந்து இருக்கிறது. படங்களை எம்ஜிஆரிடம் மனோகர் சார் காண்பிக்கும்போது எம்ஜியார் அவர்கள் என் படத்தை செலக்ட் செய்து இந்த பெண்ணை கேளுங்கள் என்று கூறி இருக்கிறார்.
அம்மாவுக்கு போன் செய்து
அம்மாவுக்கு போன் செய்து கேட்டு இருக்கிறார்கள். நான் அப்போ 10ம் வகுப்புக்கு போக வேண்டிய நேரம். அம்மாகிட்ட கேட்டது எனக்குத் தெரியாது. அப்போதும் கூட எம்ஜிஆர் சார் மனோகர் சாரிடம் தொடர்ந்து இந்த பொண்ணுதான் நடிக்கணும்... கேட்டு சொல்லுங்க என்று சொல்லி இருக்கார். மனோகர் சார் வந்து நடிக்கலேன்னு அவரையே பார்த்து சொல்லிடுங்க.நா நான் என்னவோ சமாளிக்கறதா அவர் நினைப்பார்னு சொன்னார்.
அவருடன் காரில் போனோம்
அவரே எங்களை காரில் அழைச்சுக்கிட்டு போனார்.எம்ஜிஆர் சார் ரொம்ப எளிமையா கீழே உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்.எவ்ளோ பெரிய மனுஷன் இவ்ளோ சாதாரணமா இருக்காரேன்னு தோணுச்சு. சாப்பிட்டுட்டு வந்து உனக்கு நடிக்க விருப்பமா என்று என்னிடம் கேட்டார்.நான் விருப்பம் சார்னு சொன்னேன். அப்போதும் என் அம்மா சம்மதிக்கலை. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அம்மாவை காம்ப்ரமைஸ் செய்தார்.அப்புறம் அம்மாவும் சம்மதம் சொன்னாங்க இப்படித்தான் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நடிச்சேன் என்று கூறினார்.
கமல்ஹாசனுடன் நீயா?
நான் நிறைய ஹீரோக்களுடன் நடிச்சு இருக்கேன். கமல்ஹாசனுடன் நீயா படத்தில் நடிக்கும்போது, நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா பாட்டுக்கு, கமல் முதுகுல டான்ஸ் ஆடணும்.இல்லை நான் முடியாதுன்னு சொல்லிட்டேன். கமல்தான்.. இல்லே நீங்க ஆடுங்க என்று சொன்னார். ஒரு வழியா ஓகே சொல்லிட்டு ஆடி முடிச்சேன். அது பார்த்தால் ஒன்ஸ்மோர்னு சொல்லிட்டாங்க. மறுபடியும் அவர் முதுகுல ஏறி டான்ஸ் பண்ண வேண்டியதாய் போச்சு. ரொம்ப டெடிகேஷனான ஆர்ட்டிஸ்ட் என்று கூறினார்.
சங்கர் சலீம் சைமன்
ரஜினி சார் கூட் சங்கர் சலீம் சைமன் படம் நடிச்சேன். அவர் செட்டில் வந்தாலும் துரு துறுன்னு நடந்துக்கிட்டே இருந்தார். தலையை ஸ்டைலா சிலுப்பிவிட்டு, கோதிவிட்டு டென்ஸனாகவே இருந்தார். ரெண்டு நாள் ஷூட்டிங் முடிஞ்சுது. அப்போதும் நான் குட்மார்னிங் சொல்லிட்டு என் வேலையை பார்த்துகிட்டு அமைதியா உட்கார்ந்து இருந்தேன். அப்போதுதான் ரஜினி என்கிட்டே வந்து, நீங்க பாட்டுக்கு வர்றீங்க.. உங்க ஷாட் முடிஞ்சவுடன் அமைதியா உட்கார்ந்துக்கறீங்க.. உங்களை ஏன் அவங்க அப்படி, இப்படின்னு சொன்னாங்க என்று கேட்டார். யாரோ என்னை பத்தி அவங்க இப்படிப்பட்ட கேரக்டர் அப்படி இப்படின்னு சொல்லிட்டாங்க போல இருக்கு. அதுக்குப் பிறகு நல்ல நண்பரானார் ரஜினி என்று கூறினார் லதா.