நாங்க எதிர் பார்க்கலை.. அஜீத் ராவோடு ராவாக இப்படி செய்தார்.. கபிலன்!
சென்னை: சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் பாடலாசிரியர் கபிலன் கலந்துக்கொண்டார். அப்போது பேசிய அவர் பல சுவையான நிகழ்வுகளை பகிர்ந்துக்கொண்டார்.
அஜீத்தின் ஆழ்வார் பட பாடலுக்கு பாடல் எழுதி படம் வெளிவந்த சமயத்தில், தான் ஒரு கோரிக்கை வைத்ததாகவும், இரவோடு இரவாக அஜீத் அதை செய்து முடித்தார் என்றும் அவர் கூறினார்.
சினிமாவில் பாடலாசிரியர் ஆனபோதில் இருந்து உலகநாயகன் கமல்ஹாசனை குருவாக தான் ஏற்றுக் கொண்டதாகவும் கபிலன் கூறினார். கமலின் தசாவதாரம் படத்தில் கவிஞராகவே கபிலன் நடித்தும் இருக்கார்.
தெனாலி பாடல் பம்மல் கே சம்பந்தம்
தெனாலி படத்துக்கு நான் எழுதிய பாடலை அப்படியே அப்போது ஒதுக்கி வைத்து விட்டார்கள். தெனாலி படத்துக்கு இந்தப் பாடல் வேண்டாம் என்று முடிவு செய்து, பிறகு ஒரு படத்தில் கண்டிப்பாக உபயோகப் படுத்துவோம் என்று கூறினார்கள். எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், அடுத்து பம்மல் கே சம்பந்தம் படத்துக்கு அந்த பாடலை மறக்காமல் எடுத்துக் கொண்டார்கள் என்று கூறினார்.
காதல் பாடல்கள் ஈஸி
காதல் பாடல்கள் எழுதுவது என்பது தனக்கு ஈஸி என்று கூறினார். காதல் காப்பிய புத்தகங்களில் சில வரிகளை எடுத்துக்கொண்டு.. பேனாவுடன் உட்கார்ந்தால் காதல் பாடல்கள் தனக்கு சுலபமாக வயப்பட்டு விடும் என்று கூறினார் கபிலன். "காதல் சொன்ன கணமே.. அது கடவுளைக் கண்ட கணமே.." இப்படி பல வரிகைளை நினைவுக்கு கொண்டு வந்தனர் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஐஸ்வர்யா, அசார்.
துள்ளல் பாடல்கள்
துள்ளல் பாடல்கள் எழுதுவது எனக்கு கொஞ்சம் சிரமம்.. அது நடு ரோட்டில் இறங்கி டான்ஸ் ஆட வைக்கும் துள்ளலில் இருக்க வேண்டும். விஜயின் போக்கிரி படத்தில் போக்கிரி பொங்கல் பாடல் எழுதும்போது பிரபு தேவா மாஸ்டரிடம் கேட்டேன். இதில் கொஞ்சம் சமூக கருத்துக்கள் சொல்லலாமா.. இதை பெரிய நடிகர்கள் சொன்னால்தான் ஏத்துக்குவார்கள் என்று சொன்னேன்.
மாஸ்டர் ஓகே சொன்னார்
பிரபு தேவா மாஸ்டர் உடனே ஓகே சொன்னார். அவர்தான் முதலில் ஓகே சொல்ல வேண்டும். அதற்குப் பிறகுதான் விஜயிடம் அந்த விஷயத்தை சொல்ல முடியும். இந்த விஷயத்தில் மாஸ்டருக்கு நன்றி சொல்லணும். சேரியில்லா ஊருக்குள்ள பொறக்க வேணும் பேரப்புள்ள.. போன்ற சமூக அக்கறை வரிகளை அதில் சேர்த்தேன் என்று சொன்னார்.
அஜீத் ஆழ்வார்
அஜீத் நடித்த ஆழ்வார் படத்தில் ஒரு பாடல் எழுதி இருந்தேன்.படம் வெளிவந்த பிறகு அஜீத்தை சந்தித்து ஒரு உதவி வேணும் சார்னு கேட்டேன்.. என்ன என்ன சொல்லுங்க என்று அவசரமா கேட்டார். ஒன்னும் இல்லை சார்.. படத்தில் நான் பாடல் எழுதி இருக்கேன். டைட்டிலில் என் பெயர் இல்லை.. நீங்கதான் என் பெயரை போட சொல்லணும்னு சொன்னேன். அடுத்த நாள் காலையில் படம் பார்த்தால், டைட்டிலில் என் பெயர் இருந்தது. இரவோடு இரவாக கேட்டதை செய்து கொடுத்து இருந்தார் அஜீத் என்று கூறினார் கபிலன்.