Rasathi serial: திருவிழா முடிஞ்சிருச்சா.. அடுத்து கபடிப் போட்டி.. நீ அசத்து ராசாத்தி!
சென்னை: சில நல்ல விஷயங்களை பார்க்கும் போதும் கேட்கும் போதும் நம்மையும் அந்த சந்தோஷம், உற்சாகம் தொற்றிக் கொள்ளும். அது போல இருக்கிறது ராசாத்தி சீரியலின் கோயில் திருவிழா கொண்டாட்டங்கள்.
சன் டிவியின் ராசாத்தி சீரியலில் கிராமத்து கோயில் திருவிழா கொண்டாட்டங்களை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் இயக்குநர் ராஜ்கபூர்.
கபடி போட்டி, மஞ்சள் தண்ணீர் கரைசல் ஊற்றிக் கொள்வது போன்ற காட்சிகள் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. திருவிழா என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற ஆசையும் எழுகிறது.
பரிவட்டம் ராசாத்திக்கு
எனக்குப் பின்னர் ராசாத்திக்குத்தான் பரிவட்டம் என்று அவளின் அப்பா விஜயகுமார் இருக்கும் போதே தான் மறைந்த பிறகு ராசாத்திக்குத்தான் கோயில் முதல் மரியாதையை பரிவட்டம் என்று சொல்லிவிட்டுப் போகிறார். ஆனால், மருமகள் சிந்தாமணிக்கு இது பிடிக்கவில்லை. தனக்கு முதல் மரியாதை, பரிவட்டம் கட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறாள்.
குடும்பத்துக்குள் பகை
இதனால் இரு குடும்பத்துக்குள் பகை வந்துவிடுகிறது. ராசாத்தியை திருவிழா ஆரம்பிப்பதற்குள் கொன்று விட வேண்டும் என்று திட்டம் போடுகிறாள் சிந்தாமணி.சிந்தாமணியாக நடிகை விசித்திரா முதன் முதலாக சின்னத் திரையில் நடித்து இருக்கார். ராசாத்தி இதை அறியாமல் கோயில் திருவிழா கோலாகல கொண்டாட்டத்தில் திளைத்து இருக்கா.
ராசாத்தியின் அத்தை மகன்
ராசாத்தியின் அத்தை நடிகை சுலக்ஷனா. இவரின் மகனை ராசாத்தி காதல் செய்கிறாள், அவனும் இவளை காதலிக்கிறான் என்றாலும் இருவரும் இன்னும் சொல்லிக்கவே இல்லை. ராசாத்தியை கொலை செய்ய நடக்கும் சதிகளை அவ்வப்போது முறியடித்து வருகிறான் அத்தை மகன்.
ஆபத்து அவனுக்குத்தான்
அத்தை மகனுக்கு கபடி விளையாட்டு என்றால் உயிர்.அதில் செமி ஃபைனலுக்கு இவன் குரூப் தேர்வாகி இருக்க, கபடி விளையாடும்போது அத்தை மகனை யாரோ கத்தியால் குத்திவிடுவது போல கனவு காணுகிறாள். இதில் மனசு சரியில்லாமல் போக,அத்தை மகனிடம் கபடி விளையாட வேண்டாம் என்று எச்சரிக்கிறான்.
விஷயங்களை அவ்வப்போது
அத்தை அவனை வீட்டுக்குள் வைத்து பூட்டிய போதும், பாம்பு என்று அம்மாவை பயமுறுத்தி, கதவைத் திறக்க வைத்து, கபடி விளையாட்டு விளையாட வந்துவிடுகிறான்.கபடி விளையாட்டின் மீது உள்ள ஆர்வத்தை அவன் காண்பிக்க, ஊர் பெரியவர் கபடி விளையாட்டின் பெருமைகளை கூறுவது நன்றாக இருக்கிறது.
இப்படி நல்ல விஷயங்களை அவ்வப்போது சீரியல்களில் எடுத்து கூறினால் நன்றாக இருக்கும். மக்களுக்கும் பிடிக்கும்.