அமெரிக்க ஹோட்டலில் பழைய சோறு கேட்ட தமிழர்!
சென்னை: ரேவதி சங்கரன்... இவரை நடிகை என்று சொல்வதா, நாடக கதாசிரியர் என்று சொல்வதா.. நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்று சொல்வதா.. பழங்கால விஷயங்கள் அனைத்தையும் இன்றைய தலைமுறைக்கு கொடுத்துவிட்டு செல்ல வேண்டும் என்று நினைக்கும் சமூக அக்கறை கொண்டவர் என்று சொல்வதா?
இப்படிப் பன்முகங்கள் கொண்ட திறமையாளர் ரேவதி சங்கரன். திருமணத்துக்குப் பின்னர் மும்பை வானொலியில் வேலை பார்த்து வந்த தமிழ்ப்பெண். கதா காலட்சேபம் செய்வதில் வல்லவர்.
இவரின் இந்த திறமைகளைக் கண்டு வியந்த இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் சார் சன் டிவியின் சீரியலுக்கு நடிக்க அழைத்து வந்தார்.அன்று முதல் இன்று வரை இவர் பல சேவைகளை செய்து வருகிறார்.
இப்போது கதாகாலட்சேபம் செய்வதோடு, ஆன்மீக சேனலான ஸ்ரீ ஷங்கரா டிவியில், பிள்ளையார் பெட்டி என்று நிகழ்ச்சியை வழங்கி வருகிறார். நிகழ்ச்சி ஒரு புறம் இருக்க அவர் அங்குள்ள காமிரா மேன்கள், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுடன் ஜாலியாக கலகல என்று பகிர்ந்துகொண்ட விஷயங்கள் ஏராளம் என்று இருக்குமாம்.
அமெரிக்காவில் வசிக்கும் தனது பிள்ளையுடன் ஹோட்டலுக்கு சாப்பிட சென்று இருக்கார் ரேவதி ஷண்முகம். அப்போது இவரை அடையாளம் கண்டுகொண்ட இலங்கைத் தமிழர் ஒருவர்..அருகில் வந்து ஆசையாகப் பேசி, எனக்கு பழைய சாதம் சாப்பிட வேண்டும் போல இருக்கிறது செய்து தருவீர்களா என்று கேட்டாராம்.
விஜய் டிவியின் பாட்டி வைத்தியம் நிகழ்ச்சி மூலமும் உலகம் முழுக்க பெரும் புகழும் பெயற்றவர் ரேவதி சங்கரன். அதுக்கென்ன செய்துட்டா போச்சு.. செய்து தந்துடறேன்னு ஹோட்டல்காரரிடம் ஒயிட் ரைஸ் இருக்கன்னு கேட்டு இருக்கார். அவர் இல்லை என்க, மண்சட்டி இருக்கான்னு கேட்டு இருக்கார். மண்சட்டியா என்று ஹோட்டல்காரர் திருப்பி கேட்க, டெரகோட்டா சட்டி என்றதும் இருக்குன்னு சொன்னாராம்.
அந்த மண் சட்டியில் பாசுமதி அரிசி போட்டு சோறு வடிச்சு தண்ணீர் ஊத்தி வச்சிருங்க. நாளைக்கு நான் வரேன்னு சொல்லிட்டு, பழைய சோறு கேட்ட இளைஞனையும் நாளைக்கு வரச்சொல்லிட்டு வந்திருக்கார். அதே போல மறுநாள் வந்து மண்சட்டி சோறை கேட்க ஹோட்டல்காரரும் கொண்டு வந்து கொடுத்து இருக்கார்.
பாசுமதி அரிசி சோறு மண்சட்டியில் நன்றாக குழைந்து அருமையாக இருந்ததாம். அதில் தயிர் உப்பு வெங்காயம் பச்சை மிளகா போட்டு பிசைந்து தொட்டுக்க ஊறுகாயும் வைத்துக்கொண்டு தயாராக இருந்தாராம். பழைய சோறு கேட்ட இளைஞனும் வந்துவிட, அவர் மட்டுமின்றி அனைவரும் கேட்டு வாங்கி ருசித்து சாப்பிட்டார்களாம்.
ஆனால், பில்லுதான் ரொம்ப எகிறிப் போச்சு என்கிறார் ரேவதி சங்கரன்.