Roja Serial: அத்தை அம்மா.. புருஷன் அப்பா.. ஐ நல்லாருக்கே!
சென்னை: யாரும் இல்லாது அநாதை ஆஸ்ரமத்தில் வளரும் பிள்ளைகள் ரொம்ப நல்ல பிள்ளைகளாக, படிப்பாளிகளாக ஆஷ்ரமத்தில் அனாதை என்கிற ஒரு உணர்வு இல்லாமல் வளர்கிறார்கள்.
அவர்கள் வளர்ந்து வெளியுலகை சந்திக்க நேரிடும்போது, சந்திக்கும் அவஸ்தைகள் ஏராளம். சிலர் அதை தாங்கிக்கொள்ள முடியாமல் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்.
வேறு சிலர் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு வாழும் மன உறுதியைப் பெறுகிறார்கள். இவர்கள் எல்லாருக்கும் நல்ல குடும்ப வாழ்க்கை அமைகிறதா என்றால், ஒரு சிலரைத் தவிர பலருக்கு இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
ரோஜா சீரியல் இப்படி
சன் டிவியில் மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் இந்த ரகம்தான். அனாதை ஆஸ்ரமத்தில் வளர்ந்த ரோஜா வெளி உலகத்துக்கு வர நேரிடுகிறது. அப்போது பார்த்து தனக்கு மனைவியாக நடிக்க ஒரு பெண் தேவை என்று அவள் உதவி கேட்டு போன அர்ஜுன் கேட்க, ரோஜாவும் சம்மதித்து, நடிக்க வேண்டிய கட்டாயம்.
கிரிமினல் லாயர் அர்ஜுன்
அர்ஜுன் பணக்கார பாரம்பரிய வீட்டு குடும்பத்து பிள்ளை.இவனின் பாட்டியால் அனாதை என்று ரோஜாவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை எப்போது பார்த்தாலும், என்ன குலமோ கோத்திரமோ என்று பாட்டி திட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.ஒரு கட்டத்தில் ரோஜாவை அர்ஜுன் உண்மையிலேயே காதலித்து கல்யாணம் செய்துக்கறான்.
புருஷன் அர்ஜுன்
அத்தை கல்பனாவுக்கு மருமகள் ரோஜா என்றால் உயிர். அதுவும் அவள் குணத்தை மிகவும் பாராட்டுவதும், அம்மா போல் செல்லம் கொடுப்பதும், என்று மிகவும் அருமையான அத்தையாக கல்பனா இருக்கிறார்.அதைவிட அருமையான புருஷனாக அர்ஜுன் இருக்கிறான். அவளின் குடும்பத்தை கண்டுபிடிச்சு தந்தவுடன், அவள் மகிழ்ச்சி அடைந்த நிலையில்தான் தான் அவளை தனது மனைவியாக நடத்த வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு கண்ணியவான்.
தாலி பெருக்க
பாட்டி தனது பேத்தி அணுவை இரண்டாவது பேரன் அஷ்வினுக்கு கல்யாணம் செய்ய தாலி, செய்ய சொல்லுகிறார். இன்னும் ரோஜாவுக்கு தாலி பெருக்கி கூட போடலை. அதுக்குள்ளே அடுத்த மகனுக்கு தாலி செய்யறது பத்தி பேசறீங்களே அத்தைன்னு ரோஜாவின் மாமியார் சொல்றாங்க. தாலி பெருக்கி போடணும்னா வீட்டில் அம்மா. அப்பா, கூட பொறந்தவங்க இப்படி உறவுகள் வேணுமே மருமகளே .. உன் மருமகளுக்கு பெத்த அம்மா யாருன்னு தெரியுமான்னு சுள்ளுன்னு பேசறாங்க.
அத்தை அம்மா
ரோஜா அழுதுகொண்டே மாடிக்கு போயி, என்னை பெத்த அம்மா எங்கே இருக்கே நீ... உன்னை பார்க்காம எத்தனை பேச்சு பேசறாங்க பாட்டின்னு அழறா ரோஜா. அத்தை கல்பனா வந்து பார்த்து, ரோஜா நீ இதுவரைக்கும் என்னை அத்தையா மட்டும்தான் பார்த்தியா? நீ உன் அம்மா வயித்துல பத்து மாசம் மட்டும்தான் இருந்திருப்பே. ஆனா,என் மனசில நான் சாகும் வரை மகளா இருப்பே ரோஜா. அழாதே..பாட்டி அந்த காலத்து மனுஷி. அவங்க பேசறதை நீ பெரிசா நினைச்சுக்காதே. உனக்கு அம்மாவா நான் இருக்கேன்னு அத்தை சொல்ல, அம்மான்னு கட்டிக்கறா ரோஜா.
புருஷன் அப்பா
புருஷன் அர்ஜுன் ஒரு படி மேலே போயி, தானே ரோஜாவுக்கு அம்மா என்று சொல்லி, எல்லா ஏற்பாடுகளும் செய்து தாலி பெருக்கி பொண்டாட்டிக்கு போட்டு விடறான். உங்களை பார்த்தா எனக்கு அப்பா மாதிரி தோணுது சார்னு அவன் நெஞ்சில் சாய்ந்து அழறா.
யாரும் இல்லாதவர்களை அனாதை என்று குத்திக் காட்டி அவர்களை கலங்க வைக்காமல் இருக்க வேண்டும் என்கிற பாடத்தை இந்த சீரியல் கற்பிக்கிறது.