சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு...!
சென்னை: டிவி சானல்களின் சீரியல்களில் திருமணம் ஆன பெண்கள் என்று காண்பிக்கும் போது மட்டும் அந்த கதாபாத்திரங்களில் நடிக்கும் பெண்கள் சேலை உடுத்தி வருவது பார்க்க நன்றாக இருக்கிறது.
இதையே நிஜ வாழ்வில் நிறைய பெண்கள் கடைப்பிடிக்கிறார்கள். சேலை உடுத்துவது என்பது நாகரீகம் அல்ல என்கிற அளவுக்கு இருந்த நிலைமையை மாற்றியது டிவி சீரியல்கள்தான் என்று கூட சிலர் சொல்கின்றனர்.
நவநாகரீக உடைகளில் சேலையும் இடம்பிடித்து உள்ளதற்கு சீரியலும் முக்கிய காரணம் என்றால் நம்புவீர்களா?
செய்தி வாசிப்பு காலத்தில்
தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளர் ஷோபனா ரவி செய்தி வாசிக்கும் காலத்தில், நடுத்தர வயது மற்றும் குடும்ப பெண்கள் ஷோபனா ரவியின் புடவை என்ன கலர், என்ன டிசைன் என்று பார்க்க ஆவலாக இருந்து, காத்திருந்து செய்தியை பார்த்தனர்... ரசித்தனர். ஆனால், அந்த புடவையை வாங்கி உடுத்திப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள் சதவிகிதம் என்பது கம்மிதான்.
செய்தி வாசிப்பு காலத்தில்
செய்தி வாசிப்பாளர் ஃபாத்திமா பாபு காலத்தில், இவரது செய்தி வாசிக்கும் அழகு ஸ்டைல் என்று இதற்க்கு கல்லூரி பெண்கள், ஆண்கள் என்று ரசிகைகளும்.. ரசிகர்களும்.. இருந்தார்கள். இவர் நீண்ட விரிந்த தலைமுடி, அதில் தொங்கும் மல்லிகை பூவுடன் செய்தி வாசிக்கும் அழகு தனி. இவரது சேலைக்கு என்று ரசிகை, ரசிகர்கள் இல்லை.
திரைப்படங்கள்... நடிகைகள்
பல திரைப்படங்களில் நடிகைகள் பல்வேறு வண்ணங்கள் டிசைன்கள் என்று சேலை உடுத்தி நடித்து இருந்தாலும், அந்த சேலைகள் பண்டிகை காலங்களில் அந்த திரைப்படங்களின் பெயர்களில் அல்லது அந்த சேலையை உடுத்தி இருந்த நடிகையின் பெயரோடு ஜவுளிக்கடைகளுக்கு வந்துவிடும். இதை அந்தந்த சீசனுக்கு பலரும் வாங்கி உடுத்துவது வாடிக்கை.இதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
சீரியல்கள் கற்றுத் தந்தவை
சீரியல்கள் கற்றுத் தந்தவைகளில் மிக முக்கியமான கலாச்சார பழக்க வழக்கம். கல்யாணமான பெண் என்றால் புடவை உடுத்திக் கொள்வது, வகிட்டில் குங்குமம் வைத்துக் கொள்வது இதெல்லாம். இதை பார்த்து நமது பெண்கள் எப்போதும் சேலை உடுத்திக் கொள்வது இல்லை என்றாலும், சேலையை அடிக்கடி உடுத்திக் கொள்வது. நாள் கிழமை பண்டிகை என்றால் மறக்காமல் சேலை உடுத்தி மங்களகரமாக காட்சி அளிப்பது என்று நமது கலாச்சாரத்துக்கு மெருகேற்றுவது மெய் சிலிர்க்க வைக்கிறது.
சேலையின் மகத்துவம்
சேலையின் மகத்துவமே அதை யார் உடுத்தினாலும் அழகாக இருக்கும் என்பதுதான். அதற்கு என்று ஒரு அளவு தேவையில்லை. அதற்கான ரவிக்கையை மட்டும் நீங்கள் கனக்கச்சிதமாக அளவெடுத்தாற்போல தைத்துவிட்டீர்கள் என்றால், உங்களை போல சேலையில் அழகி வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.
விதம் விதமான ரவிக்கை
இப்போது விதம் விதமான ரவிக்கைகள் டிசைன் செய்து தைத்து உடுத்திக் கொள்கிறார்கள் டிவி சீரியல்களில். அதை பார்க்கும் நமது வீட்டுப் பெண்களும் அப்படி விதம் விதமாக டிசைன் செய்து தைத்து போட்டுக் கொள்கிறார்கள். டைலர் கடைகளில் கேட்கும்போதே இந்த சீரியலில் இவள் போட்டு வருகிறாளே அது மாதிரி கை வச்சு தச்சு குடுங்க, கழுத்து வச்சு தச்சு குடுங்கன்னுதான் கேட்குறாங்களாம்...!