ப்பா.. இதயத்தை வாரிக் கொண்டு போன சீதா.. கானக் குயில்னா அது இவர்தான்!
சென்னை: விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் காட்டு நாயக்கர் பழங்குடி சிறுமி சீதா, தன் குலத்துக்கு பெருமை சேர்க்க புறப்பட்டு இருக்கார். நீலகிரி மலைவாழ் மக்களின் மாணிக்கமாக ஜொலிக்கும் சீதாவை கண்டெடுத்த ஆசிரியர் குலம் வாழ்க!
5ம் வகுப்பு படிக்கும்போதே பழங்குடி இன மக்களின் மொழி, தமிழ் மொழி குறித்த ஆராய்ச்சிக்காக வந்தவரை தனது பாடுதல் திறமை மூலம் வசப்படுத்திய சீதா.. பின்னர் 3 ஆண்டுகள் கழித்தும் அவர் கண்ணில் பட்ட சீதாவுக்கு சூப்பர் சிங்கர் மேடை வரமாய் கிடைத்தது.
குயில் குரல்...அழகு முகம் என்று வசீகரிக்கும் சிறுமி சீதா பாடல்கள் பாட கற்றுக்கொண்ட விதம் எப்படி?வானொலியில் பாடல்கள் ஒலிபரப்பும்போது கேட்ட கேள்வி ஞானம்தான். அதில் இந்த குயில் பாட கற்றுக்கொண்டது.
தமிழ் மொழி
சீதாவின் பெற்றோரில் அம்மாவுக்கு சுத்தமாக தமிழ் தெரியவில்லை... அப்பா சுமாராக பேசுகிறார். சீதா மாமா வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வந்து இருக்கிறார். 9 வது படிக்கும்போது பணம் கட்ட முடியாமல் பள்ளிக்கு செல்வதை நிறுத்தி இருக்கிறார் சீதா. இவரோடு சேர்ந்து இன்னும் சில பிள்ளைகளும் பள்ளிக்கு போக முடியவில்லையாம்.
தலைமை ஆசிரியர்
அங்கு இருந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சீதா, பின்னர் இன்னும் சில பிள்ளைகளை படிக்க வைக்க மீண்டும் அழைத்துச் சென்று இருக்கிறார். அப்போது ஆய்வு மேற்கொண்டு இருந்த ஆசிரியர் கண்ணில் மீண்டும் இந்த பளபளக்கும் மாணிக்கம் பட்டு இருக்கிறது. அவர் பள்ளியில் பாட வைத்து சீதாவின் திறமையை பள்ளி முழுக்க காண்பித்து இருக்கிறார்.
ஆடிஷன் பயம்
விஜய் டிவிக்கு அழைத்துப் போகிறேன் என்று ஆசிரியர்கள் இருவர் சொல்ல, சீதா பயந்து ஒடி ஒளிந்துக்கொண்டார். வீட்டிலும் யாரும் வெளியில் வரவில்லையாம். மலைவாழ் மக்களிடம் பேசுவதற்கே அனுமதி வாங்க வேண்டிய சூழலில், இந்த இரு ஆசிரியர்களும் அனுமதி பெற்று கலெக்டர் அனுமதியோடு சீதாவை விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஆடிஷனுக்கு அழைத்து வந்து இருக்கிறார்கள்.
அப்பா அம்மாவுக்கு டிரஸ்
எனக்கு ஃபைனல் வின் பண்ணனும்னு ஆசை இல்லை.. ஆனால், ஃ பைனல் மேடை வரைக்கும் போகணும்.. என் அப்பா, அம்மா, தம்பி தங்கச்சிங்களுக்கு டிரஸ் எடுத்து கொடுக்கணும்.. அதுதான் என் ஆசை என்று சிறுமி சீதா சொன்னதும் அதை கேட்டவர்களுக்கு ஒட்டு மொத்த ரத்தமும் ஒரு செகண்ட் குபீர்னு நெஞ்சில் பாய்ந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது.
காட்டு நாயக்கர் இனம்
பிள்ளைகள் எடுத்து வரும் கிழங்கை சீதாவின் அம்மா வேக வைத்துக் கொடுக்க, பிள்ளைகள் அதை வரிசையாக உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள். தேன் எடுத்து விற்பது.. கூலி வேலைக்கு போவது என்று சீதாவின் அப்பா வேலை செய்கிறார். பஸ் பிடிக்க வேண்டும் என்றால் 45 நிமிஷம் நடந்தால்தான் முடியுமாம். காட்டு நாயக்கர் இனம் வெறும் 30 குடும்பங்களோடு இப்போது நீலகிரியில் அழியும் தருவாயில் இருக்கிறதாம்.இதை எல்லாம் சீதாவை அழைத்து வந்த பள்ளி ஆசிரியர்கள் சொன்னார்கள்.