Azhagu Serial: அழகு சீரியல் ரேவதிக்காக இல்லையா?
சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் நடிகை ரேவதியின் இரண்டாவது மருமகள் பூர்ணா ஆடும் ஆட்டத்துக்கு எல்லாம் முதல் மருமகள் சுதாதான் பதிலடி கொடுக்கிறார்.
அப்படி என்றால் ரேவதிக்கு ரெண்டாம் பட்ச கேரக்டர்தானா? படத்தில் கூட ரேவதி தனக்கு முக்கியத்துவமான கதாபாத்திரம் இல்லை என்றால் நடிக்க மாட்டேன் என்று கூறியதாக நாளிதழ்களில் படித்து இருக்கிறோம்.
அப்படி இருக்கையில் வெறும் சீரியலில் இப்படி நடிக்க ரேவதி எப்படி ஒப்புக் கொண்டார்?
அழகம்மையாக ரேவதி
சன் டிவியில் அழகு சீரியலில் நடிகை ரேவதி அழகம்மையாக நடித்து வருகிறார். இவரின் முதல் மருமகளாக சுதா என்கிற கதா பாத்திரத்துக்குத்தான் வெயிட் அதிகம். குடும்பத்தில் எந்த குழப்பம் என்றாலும் சுதாதான் தீர்த்து வைப்பதாகத்தான் அந்த கதையில் வருகிறது.
சின்ன அழகம்மை
ரேவதியே சுதாவை சின்ன அழகம்மை என்றும், நீதான் எனக்கு அடுத்த படியான வாரிசு என்றும், எல்லா பொறுப்பையும் சுதாவிடம் ஒப்படைப்பது போன்றும் கதையை கொண்டு சென்று ரேவதியின் கதாபாத்திரத்தை டம்மியாக்கி இருப்பதை ரேவதி எப்படி ஏற்றுக் கொண்டார் என்று தெரியவில்லை.
எழுதி வச்சுட்டு
புருஷனின் தம்பி கல்யாணத்தை தடுக்க எழுதி வச்சுட்டு, கொழுத்திகிட்டு சாவேன்னு பூர்ணா சொன்னதும் ரேவதிக்கு கோபம் வருவது கதைக்கு நல்ல திருப்பமாக இருந்தது. இதுவே கதையில் தொடர்ந்து பூர்ணாவை ரேவதி தனது கோபத்தால் திருத்துவது போன்று கதை அமைந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
ரேவதி திறமை
ரேவதி மிகவும் திறமை வாய்ந்த நடிகை. அதோடு வயதானாலும் மிகவும் அழகு வாய்ந்த நடிகை. அதனால் அழகும் திறமையும் சேர்ந்து மிளிரும்போது கதை இன்னும் மெருகு கூடி பார்வையாளர்களின் ஆர்வத்தை இன்னும் சீரியல் தன் வசம் இழுக்கும். ரேட்டிங் கூடும் என்பது சீரியல் ஆர்வலர்களின் கருத்து.