Azhagu Serial: எது நல்லது எது கெட்டது?.. எதை எடுப்பது எதை விடுவது?
சென்னை: ஒரு சீரியலில் பெண்ணின் உறுதித் தன்மையை காண்பிக்கிறார்கள். இன்னொரு சீரியலில் வாழ்க்கை அவ்வளவுதானா எனும்படி பரிதாபமாக ஒரு பெண்ணை காண்பிக்கிறார்கள்.
இப்படி வரிசையாக டிவி சீரியல்கள் பல்வேறு விஷயங்களை முன்னுக்குப்பின் முரணாக செய்து வருகின்றன. வரிசையாக டிவி சீரியல்கள் பார்த்து வரும் பெண்கள் மற்றும் பெரியவர்களுக்கு குழப்பமே மிஞ்சுகிறது.
எதையும் தெளிவாக சிந்தித்து வாழ்க்கையில் முடிவு எடுக்க முடியாதபடி டிவி சீரியல்களின் ஆளுமை இருக்கிறது என்பது உண்மை.
சன் டிவியின் அழகு
சன் டிவியின் அழகு சீரியலில், கணவன் கொடுமை தாங்க முடியாமல் விவாகரத்து பெற்று பிறந்த வீட்டில் இருப்பவள் பிரியா. இவர்கள் வீட்டில் குடியேறி இருக்கும் சுதா ரவிக்கு இரண்டாவது புருஷன்தான் என்று அவர்களுக்கு தெரிய வருகிறது. பிரியாவின் அப்பா, அவளுக்கு இன்னொரு கல்யாணம் செய்துக்க சொல்றார். குழப்பத்தில் இருக்கும் பிரியா வேணாம் என்று சொல்லி விடுகிறாள். உடனே சுதாவிடம் பேச சொல்லி சொல்கிறார் அப்பா.
நானும் அப்படித்தான்
சுதா பிரியாவிடம் போயி, நானும் புருஷனை இழந்தப்போ குழந்தை அப்புவை வச்சுக்கிட்டு என்ன பண்றது..நம்ம வாழ்க்கை அவ்ளோதானான்னு நினைச்சு கலங்கி நின்னேன்.ஆனால், ரவி என்னை கல்யாணம் செய்துகிட்டார். இப்போ என்னோட வாழ்க்கை ஒளிமயமாகி இருக்கு. நீயும் ஒரு கல்யாணம் செய்துக்கோ பிரியா.உன் வாழ்ககை நன்றாக இருக்கும் என்று சொல்கிறாள். இத்தனைக்கும் சுதா வக்கீலுக்கு படித்த பெண்.
சீரியல் ரோஜா
இதே சன் டிவியின் ரோஜா சீரியலில் கணவனை பிரிந்து வாழும் போலீஸ் சந்திரகாந்தா, தனது மகளுக்காக வாழ்கிறாள். அவளை எதிரிகள் கடத்திவிட, எனக்கான பலமே என் பொண்ணுதான். அவளுக்காகத்தான் நான் வாழ்ந்துகிட்டு இருக்கேன்னு சந்திரகாந்தா புலம்பறாங்க. இப்படி குழந்தைகளை பெரிய ஆளாக்கி காண்பிப்பது மட்டும்தான் வாழ்க்கையின் குறிக்கோள் என்று வாழும் பெண்ணையும் காண்பிக்கிறார்கள்.
இப்படி எல்லாரும்
இப்படி அனைத்து மக்களும் டிவி சீரியல்களை உதாரணமாக எடுத்து வாழ்வதில்லை. என்றாலும், பல குடும்பங்களில் நாள் துவங்கி முடியும் வரை பெண்களும்,பெரியவர்களும் சீரியல்களிலேயே மூழ்கித் திளைக்கிறார்கள். டிவி சேனல்களை தங்கள் குடும்பத்தின் ஒரு அங்கமாகவே நினைக்கிறார்கள்.
எதை எடுப்பது, எதை நீக்குவது என்கிற மன நிலையில் மக்கள் குழப்பம் அடைவதற்குள் டிவி சேனல்கள் சீரியல்கள் மூலம் மக்களுக்கு நல்லது மட்டுமே சொல்வது என்கிற ,முடிவுக்கு வந்தால் சமூக நலனாக இருக்கும்.