கருவாகி உருவாகி வேரூண்றி.. 26வது பிறந்த நாளை கொண்டாடும் சன் டிவி
சென்னை: கருவாகி, உருவாகி இன்று பெரும் வேர்களை உலகெங்கும் வாழும் தமிழர்களிடையே பரவ விட்டு இருக்கும் சன் டிவிக்கு இன்று வயது 26 ஆரம்பித்து இருக்கிறது.
வெள்ளிக்கிழமை ஒலியம் ஒளியும், ஞாயிற்று கிழமை தமிழ் படம், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மதிய நேரத்தில் விருதுகள் வாங்கிய தமிழ் படம் இப்படித்தான் ஆரம்பத்தில் தொலைகாட்சி என்று ஒன்று மக்களிடையே அறிமுகமானது.
அதுதான் தூர்தர்ஷன் அரசு தொலைகாட்சி. இது தவிர சித்ரஹார்னு புதன் கிழமைகளில் இந்தி பாடல்கள், சனி கிழமைகளில் வேறு வழியில்லாமல் இந்தி படங்கள் என்றும் பார்க்க வேண்டிய கட்டாயம்.
இப்படி இருந்த காலக்கட்டத்தில்தான் முதலில் பூமாலை என்று ஒரு வீடியோ பத்திரிக்கையை குங்குமம் பத்திரிகையில் இருந்து வெளியிட்டார் கலாநிதி மாறன். இதற்கு நல்ல வரவேற்பு இருந்ததாகவும் அப்போதைய கணிப்புக்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தன. இது சன் டிவி கருவான கதை.
தினம் இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை என்று சாட்டிலைட் சேனலில் ஒரு பகுதியாக, ஒரு முன்னோட்டமாக சன் டிவி ஒளிபரப்பாகி வந்தது.ஜோடிப் பொருத்தம், பாட்டுக்கு பாட்டு, இனிய பாடல்கள் என்று தமிழர்களின் கண்களுக்கு தமிழ் விருந்து படைத்தது சன் டிவி.
பராசக்தி படத்தில் சக்ஸஸ் என்று சிவாஜி கணேசன் வசனம் பேசி இருப்பார். அதே போலத்தான் கலாநிதி மாறனின் இந்த முயற்சிக்கு உலகம் எங்கும் இருக்கும் தமிழர்களின் ஆதரவு கிடைத்தது.அவ்வளவு ஏன், தமிழ் நாட்டில் இந்த முயற்சிக்கும் பெரும் வரவேற்பு கிடைத்தது. தமிழ் மொழி அமுதம் அதை எந்த வழியிலும் பருக பருக இன்பம் என்று அன்று மக்கள் உணர்ந்தார்கள்.
பார்த்தது என்ன நிகழ்ச்சி, பெரிய இலக்கிய நிகழ்ச்சியா, தமிழ் மொழியை வளர்க்கும் நிகழ்ச்சியா என்பதில் எல்லாம் இந்த நேரத்தில் லாஜிக் பார்க்க தேவையில்லை. என்றாலும், இதுவும் தமிழை வளர்க்கும் முயற்சிதான் என்று தலை நிமிர்ந்து சொல்லலாம்.
தமிழ் மக்களின் நாடியை தெளிவாகப் பிடித்துவிட்ட கலாநிதி மாறன்.. 4 மணி நேர ஒளிபரப்பை 12 மணி நேரமாக மாற்றினார். அடுத்து 24 மணி நேரமும் சன் டிவி என்று மக்கள் திகட்ட திகட்ட தமிழ் நிகழ்ச்சிகளை பார்த்தார்கள், ரசித்தார்கள். இதற்காக கேபிள் டிவி நிறுவனம் ஒன்றும் உருவாக நேர்ந்தது.
அடுத்து கலாநிதி மாறன் போட்டதுதான் மாஸ்டர் பிளான். தூர்தர்ஷனின் இரண்டாவது சேனலில் ஜுனூன் என்று ஒரு மொழியாக்க நாடகத்தை மக்கள் ரசித்து பார்ப்பதை அறிந்திருந்த கலாநிதி மாறன், பொறுத்திருந்து வாரம் ஒரு நாளைக்கு ஒரு நாடகம் என்று முதலில் ஸ்லாட் வழங்க திட்டமிட்டார்.
அதாவது வார இதழில் தொடர்கதை படிப்பது போல, வாராவாரம் திங்கள் முதல் வெள்ளி வரை தொடர் நாடகங்கள் பார்க்கலாம். தடாலடியாக தினமும் சீரியல்கள் பார்க்கலாம் என்கிற சிந்தனையை இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் மூலம் செயல்படுத்தி காட்டினார்.
இன்றுவரை கலாநிதி மாறனின் கணக்கு தப்பாகவில்லை, மக்களின் நாடியை அன்று அவர் பிடித்ததை இன்றும் விடாமல் பிடித்து, மக்களின் ரசனைக்கு ஏற்றவாறு நிகழ்ச்சிகளை கொடுத்து வருகிறார். 26 வது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கும் சன் டிவி இன்றும் நம்பர் ஒன்தான் என்பதில் சந்தேகமில்லாத அளவுக்குத்தான் அந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.