கள்ளக்காதல்.. பில்லி சூனியம் வைக்கிறது.. பேய் பிடிக்கிறது.. இதைத் தவிர வேற எதுவும் தெரியாதா!
சென்னை: டிவி சீரியல்களின் போக்கு எங்கு போகிறது என்றே தெரியவில்லை. ஒவ்வொரு சீரியலையும் பார்க்கப் பார்க்க பிபி ஏறுகிறது.. டென்ஷன் கூடுகிறது.. பைத்தியமே பிடிக்காத குறைதான்.
அந்த அளவுக்கு கள்ளக்காதல், பேய் பிடிப்பது, சாமியாடுவது, பைத்தியக்காரத்தனமான சென்டிமென்டுகளை போட்டுத் தாக்குவது என சீரியல்கள் திகிலடித்துக் காணப்படுகின்றன.
குடும்பத்தோடு அமர்ந்து இப்படிப்பட்ட சீரியல்களைப் பார்க்கும்போது நிச்சயம் மன நிலை குழப்பமடையவே செய்யும். அப்படித்தான் இருக்கின்றன இன்றைய சீரியல்களின் கதைகள்.
செவ்வாய்கிழமை நாடகம்
ஒரு காலத்தில் நம்ம சென்னை டிடியில் செவ்வாய்க்கிழமை ஒரு மணி நேரம் நாடகம் போடுவாங்க.. ஞாபகம் இருக்கா.. குடும்பத்தோடு பார்ப்போம்.. வேற வழியில்லாட்டியும் கூட அதை உட்கார்ந்து ரசித்துப் பார்ப்போம். அதுவும் நாடகம் முடியப் போகும் நேரம் நெருங்க நெருங்க.. அடடா முடியப் போகுதே.. இனி அடுத்த வாரம்தானே என்று அங்கலாய்க்கவும் செய்வோம்.
மறைமுகமாகவோ
செவ்வாய்க்கிழமை நாடகங்கள் குடும்பப் பாங்கானவையாக இருந்தன. குடும்ப உறவுகள், குடும்ப பிரச்சினைகள், குடும்ப உறவுகளைப் பேணுவது என்று குடும்பத்தைச் சுற்றி சுற்றி வந்தன அவை. அதைப் பார்க்கும்போது நமது வீட்டில் பிரச்சினை இருந்தால் கூட அதை எப்படித் தீர்க்கலாம் என்ற யோசனைகளை அந்த நாடகங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் கொடுத்தன.
யதார்த்தம் மட்டுமே
சற்றும் ஆபாசம் இல்லாமல், இரட்டை அர்த்த வசனம் இல்லாமல், அருவெறுப்பு, வெறுப்பு, துவேஷம் என எந்த எதிர்மறையும் இல்லாமல், நேர்மறையான நாடகங்களாக அவை இருந்தன. மாமியார் கொடுமை, நாத்தனார் கொடுமை, சித்தி கொடுமை என வழக்கமான விஷயங்களும் கூட அந்த நாடகங்களில் இருக்கத்தான் செய்தன. ஆனால் யதார்த்தத்தை ஒட்டியே இருந்ததே தவிர மிகைப்படுத்தி எதுவும் இருக்காது.
கணவன் மனைவி உறவு
இப்போது உள்ளது போல கள்ளக்காதலை அந்த நாடகங்கள் போதித்ததில்லை. ஆதரித்ததும் இல்லை. கணவன் மனைவி உறவுகளை அப்படிப் போற்றின. அவற்றை வலுவாக்கும் விஷயங்கள்தான் அதிகமாக இருந்தன. இப்போது வரும் நாடகங்கள் அப்படியா உள்ளன. ஒவ்வொரு சீரியலும் ஒரு அணுகுண்டு போல இருக்கிறது. முதலில் அந்த காஸ்ட்யூம் பாருங்க.
டிடி நிபந்தனை
செவ்வாய்கிழமை நாடகத்துக்கு டிடியை ஒருவர் அணுகுகிறார் என்றால், அவருக்கு அந்த நேரத்தை வழங்க டிடி பல கண்டிஷன்களை போடும். அதாவது அதிக கேரக்டர்கள் இருக்க கூடாது. அதிக பட்சம் 20 கேரக்டர்கள் இருக்கலாம். அடுத்து சமூகத்துக்கு ஒரு மெசேஜ் உங்கள் நாடகத்தில் இருக்க வேண்டும். அடுத்து, சமூகத்தின் சீர்கேடுகளுக்கு வித்திடும் எந்த ஒரு செயலும் உங்கள் நாடகத்தில் இருக்கக் கூடாது. இந்த கண்டிஷன்களுக்கு ஓகே சொன்னால் மட்டுமே, அந்த கதை டிடிக்கு பிடித்து இருந்தால் மட்டுமே உங்கள் கதைக்கு டிடி ஓகே சொல்லும்.
இன்றைய தொலைக்காட்சிகள்
ஆனால், இன்றைய தொலைக்காட்சி நிறுவனங்கள் ஸ்லாட் வழங்கும்போது ரேட்டிங்கை ஏற்றும் விதத்தில் கதையில் பரபரப்பு அம்சங்கள் இருக்கிறதா.. வசனம் எக்குத் தப்பாக நச்சு நச்சுன்னு இருக்குதா.. கசமுசா இருக்கா.. ஹீரோயின்ஸ் கவர்ச்சியா அழகா மெழுகு பொம்மை மாதிரி இருக்கணும். ரொமான்ஸ் சீன்ஸ் எப்படி கொண்டு போகப் போறீங்க.. மக்களை டிவி முன் கட்டிப்போட என்ன யுக்தியை கையாள போறீங்க என்று கேட்டு ஸ்லாட் வழங்குகின்றன.
இடுப்பு.. முத்தம்
சினிமாவில் கூட இப்படிக் கவர்ச்சி காட்ட மாட்டார்கள். அந்த அளவுக்கு இடுப்பைக் காட்டுவது என்ன, முத்தம் கொடுப்பது என்ன, நெருங்கி வருவது என்ன.. அடடா.. கவர்ச்சிக் களேபரமாக காட்சி தருகின்றன இக்காலத்து சீரியல்கள். அதிலும் இந்தி சீரியல்களின் டப்பிங் தொடர்கள் இன்னும் மோசம். நம்ம கலாச்சாரத்துக்கு சற்றும் ஒவ்வாத காட்சிகள்தான் அதிகம் இருக்கின்றன. லிப் கிஸ் கூட வந்து விட்டதுங்க.
ஒன்லி துவேஷம்
துவேஷத்தை போஷிக்கும் சீரியல்கள்தான் இன்று அதிகம் உள்ளன. இதையெல்லாம் பார்க்கும்போது மனசுக்கு பெரும் அயர்ச்சிதான் வருகிறது. டிவி பார்க்க வருவதே பொழுது போகாமல்தான். ஆனால் அந்த டிவிக்கு வந்த இந்த சீரியல்கள் காட்டும் காட்சிகளைப் பார்த்து மனசெல்லாம் கெட்டுத்தான் போகிறதே தவிர நல்லது எதுவும் நடப்பதாக தெரியவில்லை.
கொஞ்சம் மாறுங்களேய்யா.. புதுசு புதுசா என்னவெல்லாமோ செய்கிறார்கள் வெளிநாட்டு டிவிகளில். நாம் ஏன் அப்படி ஒரு ஆரோக்கியமான மாற்றத்துக்கு போகக் கூடாது.. யோசிங்க சாரே.
Image: youtube/Aadhi Venkatesan