Tamilselvi serial: கன்னிப் பெண்ணை முதலிரவு அறை அலங்காரம் செய்ய சொல்வதா?
சென்னை: மறந்து போன, மறைந்து போன சாஸ்த்திர சம்பிரதாயங்களை டிவி சேனல்களின் சீரியல்கள் முன்னெடுத்து, மீண்டும் கடைப்பிடிக்க வைத்து பாராட்டுதல்கள் பெற்று வருகின்றன.
அதில் சிறு தவறை செய்து விட்டாலும், சுட்டிக் காட்டத்தான் வேண்டி இருக்கிறது. பழி வாங்குதல் பகைமை என்று வரும் போது சாஸ்த்திர சம்பிரதாயங்களை மீறி சில தவறுகளை செய்து விடுகிறார்கள்.
அந்த தவறு முகம் சுளிக்கும்படி இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக சொல்லியே ஆக வேண்டும்.
தமிழ்ச்செல்வி மாமன் சரவணனை கல்யாணம் செய்துகொள்ள இருக்கும் நேரத்தில் காட்சிகள் எப்படி எப்படியோ மாறி, கிளாஸ்மேட் இலக்கியாவின் அண்ணன் அமுதனை கல்யாணம் செய்துக்க வேண்டி வருது. இலக்கியாவுக்கு ஏற்கனவே தமிழ்ச்செல்வி கோல்ட் மெடல் வாங்கிட்டா என்று பொறாமை.
வீட்டுக்கு வந்த மருமகளை ஆரத்தி எடுத்து வரவேற்பது எப்போதுமே திருமணமான சுமங்கலி பெண்ணாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், சீரியல்களில் கல்யாணம் ஆகாத பெண்களை ஆரத்தி எடுக்க சொல்கிறார்கள். அதில் இலக்கியா இப்படித்தான் ஆரத்தி எடுக்கும் போதே, உன்னை இந்த வீட்டில் வாழ வைக்க ஆரத்தி எடுக்கலைடி. இந்த வீட்டை விட்டு துரத்தத்தான் இந்த ஆரத்தி என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டே ஆரத்தி எடுக்கிறாள்.
முதலிரவு அறையை அலங்கரிக்க, மூத்த மருமகளையும், கல்யாணம் ஆகாத தனது பெண் இலக்கியாவையும் அலங்கரிக்க சொல்லி அனுப்புகிறார் இலக்கியாவின் அம்மா.ஒரு வீட்டில் திருமணமான ஜோடிக்கு முதலிரவு என்றால், வீட்டில் இருக்கும் இளம் பெண்கள்,குழந்தைகளை வேறு வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள். அல்லது சீக்கிரம் தூங்க வைத்து விடுவார்கள். இங்கு என்னடா என்றால்...
திருமணமான பெண்கள் நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்துக் கொள்வது, தாலியை புனிதமாக நினைத்து அதில் குங்குமம் வைப்பது என்று எல்லாவற்றையும் மீட்டு கொண்டு வந்து, பெண்களிடம் வழக்கமாக்கியதில் டிவி சேனல்களின் சீரியல்களுக்கு முக்கிய பங்கு உண்டு. இந்த நிலையில், சம்பிரதாயங்களை மீறும் தவறுகளை தவிர்க்கலாமே!