போலீசாரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் கதறி அழும் சீரியல் நடிகை நிலானி
போலீசாரின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் நடிகை நிலானி கதறி அழுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
சென்னை: போலீசாரின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் நடிகை நிலானி கதறி அழுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடி மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் 100-வது நாளான கடந்த மாதம் 22ஆம் தேதி ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பெண்கள் உட்பட மொத்தம் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
நிலானி வீடியோ
போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். அப்போது தமிழ் சீரியல் நடிகை நிலானி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
கண்ணீர் மல்க பேச்சு
அதில், இலங்கையில் என்ன நடந்ததோ, அதே தான் தமிழ் நாட்டிலும் நடக்கும் எனவும், தமிழகத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் காரணமாக அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர் என கண்ணீர் மல்க பேசியிருந்தார்.
உடம்பு கூசுகிறது
போலீஸ் உதவி கமிஷனர் உடை அணிந்தபடி பேசியிருந்தார் நிலானி. போலீஸ் யூனிபார்மை அணிவதற்கே உடம்பு கூசுகிறது என்று கூறியிருந்தார் அவர்.
4 பிரிவுகளில் வழக்கு
நிலானியின் இந்த வீடியோ வைரலானது. இதைத்தொடர்ந்து பாஜகவினர் அளித்த புகாரின் அடிப்படையில் நிலானி மீது சென்னை வடபழனி போலீசார் ஆள்மாறாட்டம், தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
குன்னூரில் கைது
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த நடிகை நிலானியை வடபழனி போலீசார் குன்னூரில் வைத்து நேற்று கைது செய்தனர். தனது சகோதரி வீட்டில் தங்கியிருந்த நிலானியை போலீசார் கைது செய்தனர்.
கிடுக்கிப்பிடி விசாரணை
குன்னூர் மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நிலானி இன்று அதிகாலை சென்னை அழைத்து வரப்பட்டார். அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கதறிய நிலானி
வீடியோ வெளியிட தூண்டியது யார் என போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையினரின் கிடுக்கிப்பிடி கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் நிலானி கதறி அழுததாக தகவல் வெளியாகியுள்ளது.
உணர்ச்சி வேகத்தில்
உணர்ச்சி வேகத்தில் படப்பிடிப்பில் இருந்தபடி போலீஸ் யூனிபார்மில் பேசி விட்டதாக கதறினார் நிலானி. இருப்பினும் போலீசார் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுமாறு கூறியது யார் என தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.