டிவி சீரியல் கில்லர்கள்...சின்னத்திரை வழியாக வீட்டிற்குள் நுழையும் ரத்தக்காட்டேரிகள்
உறவினரின் குழந்தையை கடத்தி கொல்வது, மாமனார், மாமியார் குடும்பத்தை கொல்ல தண்ணீரில் விஷம் கலக்குவது என சின்னத்திரை வழியாக டிவி சீரியல் கொலைகாரர்கள் வீட்டிற்குள் எளிதாக நுழைந்து விடுகிறார்கள்.
சென்னை: ரத்தம் காட்டேரி வில்லிகள் நடிக்கும் சீரியல்கள் பற்றி எழுத வேண்டாம் என்று நினைத்தாலும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனைப்படுமளவிற்கு இப்போது டிவி சீரியல் கொலைகாரர்கள் அதிகரித்து வருகின்றனர்.
தெய்வமகள் என்ற பெயரில் குடும்ப சீரியலாக ஆரம்பித்து சொத்துக்காக மாமனார் குடும்பத்தை பழிவாங்கும் சீரியலாக மாறி விட்டது.
அதேபோல குலதெய்வம் என்ற பெயரில் ஆரம்பித்த சீரியல் குடும்பத்தை கெடுக்கும் சீரியலாக மாறிவிட்டது. மனதை பாதிக்கும் டிவி சீரியல்களை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.
கொடூர கொலைகள்
காயத்ரி என்று பெயரில் கொடூர வில்லியாக சீரியலில் சித்தரிக்கப்படும் பெண்,தான் வாழ வேண்டும் என்பதற்காக யாரையும் கொல்லலாம் என்ற ரீதியில் வசனம் பேசுகிறார். தான் தப்பிக்க நம்பியை சுட்டுக்கொல்வது தொடங்கி, வேலைக்காரனுக்கு மதுவில் விஷம் வைத்தது, ஐபிஎஸ் அதிகாரி தலையில் கல்லைப்போட்டு கொல்வது, ஐபிஎஸ் அதிகாரியை கொன்று புதைப்பது என கொலைகள் நீடிக்கிறது.
இதை நிறுத்துங்க
கணவனின் இரண்டாவது மனைவியை தனது குழந்தையின் கண் முன்னே ஈவு இரக்கமில்லாமல் சுட்டுக்கொல்வது, பச்சிளம் குழந்தையை கொல்ல கடத்துவது என காயத்ரியின் கொலைவெறி ஆட்டங்கள் அதிகரித்து வருகின்றன. இது போதாது என்று குடிநீரில் விஷம் வைத்து கொல்ல துடிக்கிறார். இதுபோன்ற சீரியல்களை நிறுத்துங்கள் என்று புகார்களை பதிவு செய்து வருகின்றனர் சீரியல் பார்வையாளர்கள்.
கொலை பாதக சீரியல்கள்
பொதுமக்களின் மனநிலையை மாசுபடுத்தும் டிவி சீரியல்கள் பெருகிவிட்டதாக உயர் நீதிமன்ற நீதிபதி என் கிருபாகரன் கூறியுள்ளார். நெல்லையில் மனநலம் குன்றிய 60 வயது மூதாட்டி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர், ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
மனநிலை மாசு
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி என். கிருபாகரன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தார். சமீப காலமாக, அனைத்து இடங்களிலும் பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளன. இன்றைய சினிமா மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் மனிதர்களின் மனநிலையை மாசுபடுத்துகின்றன என்றார் நீதிபதி என் கிருபாகரன்.
குல தெய்வமா? கொலை தெய்வமா?
குடும்பத்தை கெடுக்க பச்சிளம் குழந்தைகளை கடத்துவது இப்போது சீரியல்களில் லேட்டஸ்ட் டிரெண்ட் ஆகி வருகிறது. அதேபோல பல கொலைகளை செய்தவன் ஈசியாக தப்பித்து போலீஸ் வேலையில் சேர்ந்து விடலாம் என்பது போல சீரியல்கள் ஒளிபரப்பாகின்றன. மாமனாரே மருமகளை கத்தியால் குத்தி கொல்வது போலவும் ஒளிபரப்புகின்றனர்.
கொலை பாதக சீரியல்கள்
மாமியார் மருமகள் கொடுமை கதைகள் போய் இப்போது கொலை பாதக சீரியல்கள் ஒளிபரப்பாகி மக்களின் மனதை மாசு படுத்துகின்றன என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது. சேட்டிலைட் சேனல்களில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் குடும்பத்தை கெடுப்பதோடு பலரின் மனதை கெடுப்பதாகவே உள்ளது. டிவி சீரியல்களை சென்சார் செய்து ஒளிபரப்ப வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது.