பிரியா பவானி சங்கரைத் தொடர்ந்து வெள்ளித் திரைக்குத் தாவும் வாணி போஜன்
சென்னை: பிரியா பவானி சங்கரை தொடர்ந்து, நடிகை வாணி போஜனும் வெள்ளித்திரையில் கால் பதித்துள்ளார்.
செய்தி தொகுப்பாளராக இருந்து பின்னர் கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் பிரியா. பின்னர் மேயாத மான் படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான அவர், கடைக்குட்டி சிங்கம் படத்திலும் நடித்திருந்தார். 2 படங்களுமே வரவேற்பை பெற்றதை தொடர்ந்து மான்ஸ்டர், குருதி ஆட்டம் மற்றும் துல்கர் சல்மான் படம் என அடுத்தடுத்து நடித்து வருகிறார்.
பிரியா சீரியலில் நடித்துக் கொண்டிருந்த அதே நேரம், அதிக ரசிகர்களை கொண்டிருந்த மற்றொரு சீரியல் நடிகை வாணி போஜன். இவரது உண்மையான பெயரை விட சீரியலில் இவரது பெயரான சத்யா என்பதே இவரது அடையாளமாகி போனது. மூடர்கூடம் படத்தில் நடிகை வந்த வாய்ப்பை மறுத்த வாணி போஜன், தற்போது வைபவ் முதல் முறையாக போலீசாக நடிக்கவுள்ள படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகிறார்.
இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த எஸ்.ஜி.சார்லஸ் இப்படத்தை இயக்குகிறார். பிரியா பவானி சங்கர் வைபவ் படத்தில் அறிமுகமான நிலையில், வாணி போஜனும் அவரது படத்திலேயே அறிமுகமாகிறார். வாணி போஜனின் வெள்ளித்திரை பயணம் எப்படி அமையப்போகிறது என பார்ப்போம் .