விஜய்... லைட்ஸ் ஆன் பண்ணிட்டா ஒரு மாதிரி.. ஆப் பண்ணிட்டா வேற மாதிரி.. !
சென்னை: நடிகர் விஜய் லைட்ஸ் ஆனில் ஒரு மாதிரி லைட்ஸ் ஆஃபில் வேறு மாதிரி என்று ஆச்சரியப்படுத்துவார் என நடிகை பூர்ணிமா பாக்யராஜ் கூறி உள்ளார். சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
பூர்ணிமா பாக்கியராஜ் .. பூர்ணிமா ஜெயராம் என்று அறிமுகம் ஆகி நடிக்க வந்தவர். தமிழில் கிளிஞ்சல்கள் திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனார். பயணங்கள் முடிவதில்லை படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார்.
விதி படம் இவரின் நடிப்பை மற்றும் ஒரு பரிமாணத்துக்கு எடுத்துச் சென்றது. அதன் பிறகு தங்கமகன் என்கிற சூப்பர் ஸ்டார் ரஜினி படம்.. நீங்கள் கேட்டவை பாலுமகேந்திரா படம் என்று பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து 80களின் சூப்பர் ஹிட் ஹீரோயினாக வலம் வந்தார்.
டார்லிங் டார்லிங்
இயக்குநர் கே.பாக்யராஜ் இயக்கத்தில் அவருடன் பூர்ணிமா ஜோடி சேர்ந்து நடித்த டார்லிங் டார்லிங் படம் வழக்கம் போல் வெற்றி படமாக அமைந்தது மட்டும் இல்லாமல், பூர்ணிமா பாக்கியராஜ் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது அந்த படத்தில் நடிக்கும்போதுதான். படம் முடிந்து ஓரிரு மாதங்களில் இருவரும் திருமணம் செய்துகொண்டு தம்பதியராகி இருந்தனர்.
இருவருக்குள்ளும் காதல்
இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது எப்படி.. காரணம் நீங்கள் ரொம்ப பிசியா தமிழ், மலையாளம். தெலுங்கு என்று நடித்துக்கொண்டு இருந்தீர்கள் என்று கேட்டபோது.. முழுக்க முழுக்க காதல் திருமணம் என்று சொல்ல முடியாது. 10 சதவிகிதம் மட்டும்தான் காதல்.. மத்தபடி அரேஞ்டு கல்யாணம்தான் என்று கூறினார் பூர்ணிமா பாக்கியராஜ். கல்யாணத்துக்குப் பிறகுதான் முழுக்க முழுக்க காதல் என்றும் சொன்னார்.
நடிக்காமல் விலகி இருந்தது
திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் அவ்வளவு வருடங்கள் விலகி இருந்தது குறித்து என்று கேட்டபோது... இப்போ ஏன் அப்படி நாம ஒதுங்கி இருந்தோம்னு நினைக்கிறேன். ரொம்ப தப்புன்னு இப்போ உணர்கிறேன்.. பெண்கள் எல்லாருக்குமே நான் சொல்றது.. உங்க பேஷன்.. விருப்பம் இதில் இருந்து எப்போதும் விலகி விடாதீர்கள் என்றுதான். நான் என்னோட லைக், பேஷன் எல்லாத்தையுமே இவ்வளவு நாட்கள் விட்டுட்டு இருந்தது பெரிய மிஸ்டேக் என்று கூறினார்.
கில்லியில் அம்மா
இதுவரைக்கும் நடிக்காமல் விலகி இருந்ததில்... கில்லி பட வாய்ப்பு எனக்கு வந்தது. அதிலும் விஜய்க்கு அம்மாவா நடிக்க அப்பவே வாய்ப்பு வந்தது. நான் வேணாம்னு சொல்லிட்டேன். அதில் அம்மாவா நடிச்சது என் ஃபிரண்ட்தான்.. எவ்ளோ நல்ல கேரக்டர்.. இதை மிஸ் பண்ணிட்டோமேன்னு வருத்தமா இருந்தது. அடுத்து ஜில்லா பட வாய்ப்பு வந்தப்போ சாந்தனு, இந்தப் படத்தையாவது ஒத்துக்கோன்னு கம்பெல் பண்ணி ஒத்துக்க வச்சான்.
நடிப்பில் புயல்
விஜய் செட்டில் அமைதியா இருப்பார்.. என்னடா இவர் இப்படி உட்கார்ந்து இருக்காரேன்னு தோணும். ஷாட் வரும்போது டோட்டலா மாறி அங்கே புயல் மாதிரி நடிச்சுட்டு வருவார். அப்புறமாத்தான் எனக்கு தெரிஞ்சுது.. அவர் சுத்தி இருக்கறவங்களைப் பார்த்து அப்சர்வ் பண்ணுகிறார் என்று. இவரா இப்படி என்று அவர் நடிக்கும் போது ஆச்சரியப்பட்டு பார்ப்போம் என்று சொன்னார்.