இப்படி நல்லவைகளை புறக்கணிச்சால் எப்படி?
சென்னை: தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உருப்படியான நிகழ்ச்சிகளை காண்பது என்பது இப்போதெல்லாம் அரிதாகிவிட்டது. அதையும் மீறி சில நல்ல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் போது மனம் அளவில்லா ஆனந்தத்தில் மகிழும்.
அப்படி ஒரு நிகழ்ச்சியாகத்தான் சன் டிவியின் நம்ம ஊரு ஹீரோ நிகழ்ச்சி இருந்தது. இதை நடத்தியவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.
ரொம்ப ஜோரா இருந்த இந்த நிகழ்ச்சியை சன் டிவி நிறுத்தி பல மாதங்கள் ஆனாலும், மீண்டும் காலையில் மறு ஒளிபரப்பு செய்து வந்தார்கள்.
நம்ம ஊரு ஹீரோ
தினமும் திங்கள் முதல் வெள்ளி வரை காலையில் வணக்கம் தமிழா நிகழ்ச்சி முடிந்ததும், மறு ஒளிபரப்பாக நம்ம ஊருஹீரோ நிகழ்ச்சியை ஒளிபரப்பியது சன் டிவி. இதன் கடைசி எபிசோடாக நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அனைத்து ஊர் ஹீரோக்களையும் ஒன்றாக சந்தித்து சன் டிவியில் வந்த பிறகான மாற்றம் பற்றி கேட்டார்.
மகிழ்ச்சியில் அனைவரும்
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஹீரோ, ஹீரோயினாக ஜொலித்தவர்கள், திருநங்கைகள் எல்லார் முகத்திலும் மகிழ்ச்சி. ஆம்புலன்ஸ் ஓட்டி ஹீரோவானவர், டாய்லெட் கேட்டு அப்பா மேல் கேஸ் போட்ட சிறுமி, கொத்தடிமைகளை மீட்டெடுத்த படிக்காத பெண்மணி, வங்கியின் அருமை பெருமைகளை மக்களிடம் கொண்டு சேர்த்த அதிகாரி, இன்ஜினியரிங் படித்துவிட்டு, கிராமத்து குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுத்த இளைஞர் என்று எத்தனை எத்தனை முகங்கள்..
மனிதர்கள் இப்படியும்
இப்படியும் மனிதர்கள் இந்த பூமியில் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை அறியவும், நாமும் இப்படி முயற்சிக்கலாமே என்கிற உந்துதலையும் ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக இருந்தது இது. நிகழ்ச்சியை முடித்துவிட்ட சன் டிவி சீசன் இரண்டு என்று தொடங்கி நடத்தினால் நன்றாக இருக்கும்.
காலையில் இன்று
இன்று காலையில் வணக்கம் தமிழா நிகழ்ச்சி முடிந்து கல்யாண வீடு சீரியல் குடும்பத்தின் கொண்டாட்டம் என்று மறு ஒளிபரப்பு. காலை நேரம் சப்பென்று ஆகிவிட்டது. சீரியலில்தான் இவங்களை பார்த்து பார்த்து ஓய்ந்து போகிறார்களே, நிஜ ஹீரோக்களையும் இன்னும் இன்னும் என்று அடையாளம் காட்ட வேண்டும் சன் டிவி.