ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக வருமா?.. வெப் சீரிஸாக வருமா?
Recommended Video
சென்னை: ஒரு பெண் மகளிர் குழு தலைவியாக ஆக வேண்டும் என்றாலே பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. அதுவும் மாநில முதல்வராக ஆட்சியில் அமர வேண்டும் என்றால் எத்தனை பிரச்சனைகளை சந்திக்க வேண்டியது இருந்திருக்கும்?
அதுவும், அவருக்கு உதவி, ஆலோசனை செய்ய உற்றார் உறவினர் என்று கட்சியில் யாருமில்லை. இந்த நேரத்தில்தான் கூட இருந்தே பின்னால் குழி பறிக்கும் வேலைகளும் நடக்கும். ஆனால், இது போன்ற எதிர்ப்புக்களை, பழிவாங்குதல்களை தன் கட்டுக்குள் கொண்டு வந்து, கமபீரமாக ஆட்சி செய்வது என்பது சாதாரண விஷயமா?
இப்படிப்பட்ட இரும்பு பெண்ணான ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை படமாக்க இயக்குநர் இமயம் பாரதிராஜா, இயக்குநர் பிரியதர்ஷினி ஆகியோ் மும்முரமாக உள்ள நிலையில், இந்த போட்டியில் இயக்குனர் கவுதம் மேனனும் இணைந்துள்ளார்.
கவுதம் மேனன் வெப்சீரிஸ்
சில வாரங்களுக்கு முன்னர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் குயின் என்ற வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட சீரிஸ் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் ‘குயின்' வெப் சீரிஸ் யாரைப் பற்றியது என ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ. தீபக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தி அயர்ன் லேடி
பிரியதர்ஷினி தி அயர்ன் லேடி என்ற தலைப்பில் படத்தை இயக்குவதாக ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். இதில் ஜெயலலிதா பாத்திரத்தில் நித்யா மேனன் நடிப்பதாக அறிவிப்பும் வெளியானது. ஆனால், இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை.
கங்கணா ரணாவத்
தலைவி என்ற பெயரில் ஏஎல் விஜய் இயக்கும் படத்தில், ஜெயலலிதாவாக நடிகை கங்கணா ரணாவத் நடிக்கவுள்ளார். இதற்கான முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்றும் சொல்கிறார்கள்.
வெளியிடப்பட்ட அறிக்கையில்
தனது வெப்சீரிஸ் குறித்து கெளதம் மேனன் தரப்பு வெளியிட்ட அறிக்கையில் குயின் வெப் சீரிஸின் கதை நாமறிந்த ஒரு பிரபல அரசியல்வாதியின் ஆளுமை மற்றும் அவருடைய குணாதிசயங்கள் கொண்டு ஆட்சி செய்த திறமை ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
அறிக்கை ஜெ.தீபக்
இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகனான ஜெ.தீபக் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஒரு அரசியல் தலைவரை மையமாக வைத்து குயின் என்ற வெப் சீரிஸை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருவதாகவும், அதில் ரம்யா கிருஷ்ணன் நாயகியாக நடிப்பதாகவும் ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.
கவுதம் மேனன் விளக்கம்
இந்த சூழலில், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு அரசியல் தலைவரைப் பற்றிய தன்னுடைய புதிய வெப் சீரிஸ் பற்றி அறிவித்துள்ளார். அந்த அரசியல் தலைவர் யார் என்பது குறித்து எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. நான் ஊடகங்களிடம் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். என் குடும்பத்தின் அனுமதியின்றி ஏதேனும் ஒரு படமோ அல்லது ஒரு வெப் சீரிஸோ என்னுடைய அத்தை ஜெயலலிதாவை மையமாக வைத்து எடுக்கப்பட்டால் அதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு கையாள்வோம். யார் குயின் என்பதை கௌதம் மேனன் தெளிவுபடுத்துவார் என்று நம்புகிறேன் என்று கூறி உள்ளார்..
சசிகலா கதையில்
கதையில் சசிகலா கதாபாத்திரத்தை நீக்கி உள்ளதாகவும், ரம்யாகிருஷ்ணன் பெயர் கதைப்படி சக்தி என்றும் கவுதம் மேனன் கூறி இருக்கிறார். ஆனால்,படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஜெயலலிதா வாழ்க்கை குழப்பங்கள் நிறைந்தது என்றாலும், அவரின் இறப்பு மர்மங்கள் நிறைந்தது. அந்த வலியில் இருந்தே மக்கள் மீண்டு வராத நிலையில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று கதை சினிமாவாக வந்தாலும் சரி, வெப் சீரிஸாக வந்தாலும் சரி. எந்த அளவுக்கு அதில் உண்மைத் தன்மை இருக்கும்?
அழகு, அறிவு நிறைந்த ஆளுமைப் பெண்ணே... உம்மை வைத்து உண்மைக் கதையை எடுப்பது என்பது சாத்தியமா?