பெண்களை இழிவு படுத்துவதா? எங்க வீட்டு மாப்பிள்ளைக்கு எதிராக மாதர் சங்கத்தினர் போராட்டம்
எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி பெண்களை இழிவுபடுத்துவதாகவும், தமிழக கலாசாரத்தை சீரழிப்பதாகவும் இருப்பதாக கூறி மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம்: ஆர்யா பங்கேற்கும் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி பெண்களை இழிவுபடுத்துவதாகவும், தமிழக கலாசாரத்தை சீரழிப்பதாகவும் இருப்பதால் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என்று மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலர்ஸ் டிவியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடத்தும் ஆர்யா, தனக்காக பெண் தேடி வருகிறார். இதற்கு பெற்றோர்களே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் குடவாசலில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ஆர்யா கும்பகோணம் கல்லூரி சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த கும்பகோணம் துர்கா மாதர் சங்கத்தை சேர்ந்த பெண்கள் 10-க்கும் மேற்பட்டோர் அந்த ஹோட்டலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நடிகர் ஆர்யா பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி பெண்களை இழிவுபடுத்துவதாகவும், தமிழக கலாசாரத்தை சீரழிப்பதாகவும் இருப்பதால் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என்றும் மாதர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கும்பகோணம் கிழக்கு போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். போலீஸ் பாதுகாப்புடன் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நடிகர் ஆர்யா புறப்பட்டு சென்றார்.