‘இருட்டடிப்பு செய்கிறார்கள்.. இது சட்டப்படி குற்றம்’.. கேபிள் ஆபரேட்டர்கள் மீது பிரபல சேனல் புகார்
ஜீ தமிழ் தொலைக்காட்சி சட்டத்துக்கு புறம்பாக இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
சென்னை: சில கேபிள் ஆப்பரேட்டர்கள் தங்கள் தொலைக்காட்சியை சட்டத்துக்கு புறம்பாக இருட்டடிப்பு செய்துள்ளதாக ஜீ தமிழ் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி சேனல்களில் ஒன்றாக இருக்கிறது ஜீ தமிழ். இந்த தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் செம்பருத்தி மெகா சீரியலுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அதுபோல் பல நிகழ்ச்சிகளும் மக்களிடையே பிரபலமாக உள்ளது.
இந்நிலையில் கட்டணம் செலுத்தியும் தங்கள் வீட்டில் ஜீ தொலைக்காட்சி தெரிவதில்லை என வாடிக்கையாளர்கள் சிலர் டிவிட்டர் மூலம் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து அந்த தொலைக்காட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கேபிள் ஆப்பரேட்டர்கள் சிலர் தங்கள் தொலைக்காட்சியை சட்டத்துக்கு புறம்பாக இருட்டடிப்பு செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அரசு கேபிள் டிவி, எஸ்சிவி, விகே டிஜிட்டல் ஆகிய எம்எஸ்ஓக்கள் மற்றும் ஏர்டெல், டாட்டா ஸ்கை, சன் டைரைக்ட் உள்ளிட்ட டிடிஎச் நிறுவனங்கள் மூலம் ஜீ தமிழ் உள்ளிட்ட தங்களுடைய அனைத்து தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. டிராய் விதிப்படி ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒளிப்பரப்பு கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்பட்டு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
I'm using SCV operator more than 2 years. I paid my fee for Zee tamil channel at starting of this month but they have discarded this particular channel in half away while I'm using it...Is there any solution to watch again or can I get refund for this channel ?@rssharma3 @TRAI
— Vijay M Raghavan (@Vjmraghavan) December 21, 2019
எனவே ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு கட்டணம் செலுத்திய வாடிக்கையாளர்கள், சேனல் தெரியாத பட்சத்தில் உடனடியாக தங்கள் பகுதியின் கேபிள் டிவி ஆப்பரேட்டரை தொடர்பு கொள்ள வேண்டும் என நிர்வாகம் கேட்டுள்ளது. கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியை இருட்டடிப்பு செய்வது சட்டத்துக்கு புறம்பானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.