ஆன்லைன் புக்கிங்கில் 10 வயது.. அடையாள அட்டையில் 12 வயது.. பம்பையில் சிறுமி தடுத்து நிறுத்தம்
திருவனந்தபுரம்: ஆன்லைன் புக்கிங்கில் சிறுமிக்கு 10 வயது என குறிப்பிட்டு விட்டு அடையாள அட்டையில் 12 வயது என இருப்பதால் ஒரு சிறுமியை கேரள போலீஸார் பம்பையில் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சபரிமலைக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, சுவாமியை தரிசனம் செய்வதில் ஆண், பெண் பேதம் இருக்கக் கூடாது. எனவே சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.
அரசியல் சாசனம்
இந்த தீர்ப்பை எதிர்த்து கேரளத்தில் உள்ள நாயர் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்தது. இதன் மீதான தீர்ப்பு கடந்த வாரம் வந்தது. அதில் இந்த மனுவை விசாரிக்குமாறு 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.
பெண்கள் தடுத்து நிறத்தம்
அதுவரை சபரிமலைக்கு அனைத்து வயதினரும் அனுமதிக்கலாம் என்ற முந்தைய தீர்ப்பு தொடரும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில் கடந்த 16-ஆம் தேதி ஐயப்பன் கோயில் நடைத் திறக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற ஆந்திர பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
12 வயது
மேலும் மாநில அரசு கூறுகையில் சபரிமலைக்கு சுயவிளம்பரத்துக்காக வரும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது என கூறிவிட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் பேலூர் பகுதியைச் சேர்ந்த உறவினர்கள் சபரிமலைக்கு சென்றனர். இவர்கள் குழுவில் 12 வயது சிறுமியும் அவரது தந்தையும் இருந்தனர்.
இருமுடி
பம்பை வந்தவுடன் அவர்களை கேரள போலீஸார் சோதனை செய்தனர். அப்போது இருமுடி கட்டுவதற்கான ஆன்லைன் புக்கிங்கில் அந்த சிறுமிக்கு 10 வயது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சிறுமியின் அடையாள அட்டையை சோதனை செய்ததில் அவருக்கு 12 வயது என தெரியவந்தது.
பரபரப்பு
பின்னர் அந்த சிறுமி போலீஸாரால் அங்கேயே தடுத்து நிறுத்தப்பட்டார். இதையடுத்து சிறுமியை விட்டுவிட்டு அவரது உறவினர்கள் மட்டும் ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.