சபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு...போலீஸ் கெடுபிடியால் கூட்டம் குறைந்தது
சபரிமலையில் 144 தடை உத்தரவை 4 வது முறையாக நீட்டித்து பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருவனந்தபுரம்: சபரிமலையில் 144 தடை உத்தரவை 4 வது முறையாக நீட்டித்து பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, இந்து அமைப்புகள், அரசியல் கட்சிகள் என போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
சபரிமலைக்குள் அனைத்து வயது பெண்களை அனுமதிப்பதை எதிர்த்து, கேரளா பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கேரள தலைமை செயலகம் முன்பு இன்று 3-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.
பல விதமான பரபரப்புகள் அங்கு நிலவுவதால், கடந்த மாதம் 16-ந்தேதி நடை திறந்ததில் இருந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற கெடுபிடி காரணமாக பக்தர்களின் வருகையும் குறைந்து உள்ளது. இந்தநிலையில், இன்று முதல் 8-ந்தேதி வரை இளவங்கல் முதல் சன்னிதானம் வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம், அய்யப்ப பக்தர்கள் சபரிமலையில் நாமஜெபம் நடத்தவோ, சரணகோஷம் எழுப்பவோ தடை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சபரிமலையில் அய்யப்ப பக்தர்களுக்கு செய்யப்பட்டு உள்ள அடிப்படை வசதிகள், போலீஸ் கெடுபிடிகள் பற்றி ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஸ்ரீஜெகன்,ராமன், முன்னாள் டி.ஜி.பி. ஹேமச்சந்திரன் ஆகியோர் கொண்ட குழுவை கேரள உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது. இந்த குழு வருகிற 10-ம் தேதிக்குள் தங்களது அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.