கேரளாவை உலுக்கியுள்ள மலப்புரம் கிளஸ்டர்.. ஒரே ஸ்கூலில், ஒரே நேரத்தில் 192 பேருக்கு தொற்று!
திருவனந்தபுரம்: கேரளாவின் மலப்புரத்தில் உள்ள இரண்டு பள்ளிகளில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவர்கள் 192 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதில் 91 பேர் ஒரே டியூசன் சென்டரில் படித்தவர்கள் என்ற தகவலை கேட்டு அதிகாரிகள் ஆடிப்போய் உள்ளனர். இந்த கிளஸ்டர் பரவல் கேரள மாநிலத்தை உலுக்கி உள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து இயல்பு நிலை வேகமாக திரும்பி வருகிறது. அதேநேரம் மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பரவும் வேகம் அதிகமாகி உள்ளது.
கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் அடுத்தடுத்து உள்ள பள்ளிகளில் படித்த 192 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர்களுடன் தொடர்புடைய அத்தனை பேரையும் தேடி கண்டுபிடித்து, கொரோனா பரிசோதனை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கேரளாவில் வகுப்புகள்
கொரோனா பரவலால் மூடப்பட்ட பள்ளிகள் தற்போது படிப்படியாக எல்லா மாநிலங்களிலும் திறக்கப்படுகின்றன. அப்படித்தான் கேரளாவில உயர் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன.
பொதுத்தேர்வு
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். இங்குள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் டியூசன் சென்டரில் படித்து வந்துள்ளனர். அந்த டியூசன் சென்டரில் பயின்ற இண்டு மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது.
192 பேருக்கு பாதிப்பு
அதன்பிறகு அடுத்தடுத்து பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. இதுவரை 192 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 91 பேர் ஒரு பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இதையடுத்து அந்த டியூசன் சென்டர் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுடன் பள்ளியில் கல்வி பயின்ற மாணவர்கள் வீட்டில் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
தனிமை
இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் உள்ள 2 பள்ளிகளையும் கேரள அரசு மூடியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு உள்ள மூன்றாவது பள்ளிளையும் அதிகாரிகள் மூடிவிட்டனர். அனைவரையும் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
நம்பரை தர முடியாது
கல்வி நிலையத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் இன்று கொரோனா பரிசசோதனை நடத்தப்பட உள்ளதாக மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் கே சகீனா தெரிவித்தார். "எவ்வளவு பேருக்கு சோதனை நடத்த போகிறோம் என்ற நம்பரை எங்களால் கொடுக்க முடியாது - ஏற்கனவே பாசிட்டிவ் வந்த மாணவர்களுக்கு கல்வி மையத்துடன் தொடர்புகள் இருந்தன. அதிலும் சிலருக்கு பாசிட்டிவ் இருப்பது பதிவாகியுள்ளன, மேலும் அங்குள்ள அனைத்து மாணவர்களும் ஒட்டுமொத்த சோதனையின் ஒரு பகுதியாக சோதிக்கப்படுவார்கள்.
பெரிய பட்டியலே ரெடி
மாணவர்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 2,000 பேர் மற்றும் ஆசிரியர்களின் வீடுகளும் பரிசோதிக்கப்பட உள்ளனர். இந்த பட்டியலில் பெற்றோர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என பெரிய பட்டியலே உள்ளது என்றார்.
அதிகாரிகள் அதிர்ச்சி
இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில். "முதலில் ஒரு மாணவர் தான் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார். அதன்பிறகு ஆசிரியர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. முன்னெச்சரிக்கை அடிப்படையில் 600 க்கும் மேற்பட்டோரை பரிசோதித்தோம். அதில் 192 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த மாணவர்களில், 149 ஒரு பள்ளியைச் சேர்ந்தவர்கள், 43 பேர் மற்ற பள்ளியைச் சேர்ந்தவர்கள் ஆவார். அதே நேலம் மாணவர்களிடையே தொற்றுநோய்க்கான பரவல் ஒரு ஒரு பொதுவான கிளஸ்டராக இதுவரை கண்டறியப்படவில்லை. தொடர்பு தடமறிதல் மற்றும் சோதனை இன்னும் நடந்து வருகிறது என்று அதிகரிகள் தெரிவித்தனர்.