சபரிமலையில் தொடரும் டென்ஷன்.. இன்றும் 2 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்
திருவனந்தபுரம்: சபரிமலைக்கு சென்ற இரு பெண்கள் நிலக்கல்லில் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை கடந்த ஆண்டு அறிவித்தது. இதற்கு பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இதையடுத்து சபரிமலைக்கு சென்ற பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றனர். கடந்த 2-ஆம் தேதி பிந்து, கனகதுர்கா ஆகிய இரு இளம்பெண்கள் சபரிமலைக்கு சென்று 18 படி ஏறாமல் பின்வாசல் வழியாக சென்று முதல் முறையாக சுவாமி தரிசனம் செய்தனர்.
இதுபோல் 10 பெண்கள் சபரிமலைக்கு சென்றதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த ஷனிலா, ரேஷ்மா ஆகியோர் சபரிமலை சென்றுள்ளனர்.
அப்போது போராட்டக்காரர்கள் அவர்கள் இருவரையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் அவர்களை முன்னேற விடாமல் நிலக்கல்லிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸார் பாதுகாப்பு அளித்தும் போராட்டம் முற்றியதால் இருவரையும் திருப்பி அனுப்பினர்.