இளைஞர் காங். 2 தொண்டர்கள் வெட்டிக்கொலை.. கேரளாவில் இன்று பந்த்.. தமிழக பஸ்கள் எல்லையில் நிறுத்தம்
திருவனந்தபுரம்: கேரளாவில் இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதையடுத்து, மாநிலம் தழுவிய பந்த்துக்கு காங்கிரஸ் கட்சி இன்று அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து, கேரளா செல்லும் தமிழக பஸ்கள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.
கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில், இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, க்ரிபேஷ் என்ற 24 வயது வாலிவரும், சரத்லால் என்ற 29 வயது வாலிபரும் நேற்று வெட்டிக் கொல்லப்பட்டனர்.
இவ்விருவரும் டூவீலரில் சென்றபோது காரில் வந்து வழிமறித்த ஒரு கும்பல், சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டது.
இவ்விருவரையும், ஆளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கேரளா காங்கிரஸ் தலைவர் மல்லபள்ளி ராமச்சந்திரன் இதுகுறித்து கூறுகையில், பினராயி விஜயன், தனது ஆட்களிடம் ஆயுதங்களை கீழே போடச் சொல்ல வேண்டும். அதன்பிறகுதான் கேரளாவில், அமைதி திரும்பும். எங்கள் கட்சியின் இளைஞர்கள் மார்க்சிஸ்ட் கட்சியினரால் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், இக்கொலையை எதிர்த்து கேரளாவில் இன்று பந்த் நடத்த காங்கிரஸ் அழைப்புவிடுத்துள்ளது. இதையடுத்து தமிழக பஸ்கள், போடிமெட்டு, களியாக்கவிளை போன்ற, எல்லைப்பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.