கொரோனா வைரஸ்.. கேரளாவில் 3 வெளிநாட்டவர்கள் உள்பட 2,528 பேர் தனியாக கண்காணிப்பு
Recommended Video
திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக 3 வெளிநாட்டவர்கள் உள்பட 2,528 பேர் தனியாக கண்காணிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
நாட்டிலேயே கேரளாவில் தான் கொரோனா வைரஸால் மூன்று பேர் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சூர், ஆலப்புழா மற்றும் காசராகோடு ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இவர்கள் மூவரும் சீனாவின் வுஹான் பல்கலைக்கழக மாணவர்கள் ஆவர்.அங்கிருந்த இந்தியா அழைத்துவரப்பட்ட அவர்களுக்கு தனிமை வார்டில் தங்க வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில சுகாதார அமைச்சர் கே.கே. சைலஜா, கொரேனா வைரஸ் தொடர்பான சிறிய அளவிலான அறிகுறிகளுடன் குறைந்தது 93 பேர் பல்வேறு மருத்துவமனைகளின் தனிமை வார்டுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் இன்று புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் கண்டறியப்படவில்லை. அத்துடன் குறைந்தது 2,435 பேர் வீட்டிலேயே கண்காணிக்கப்படுகிறார்கள்,
கொரோனா வைரஸ் அறிகுறியுடன் எர்ணாகுளம் மாவட்டத்தில் இரண்டு வெளிநாட்டவர்களும், திருவனந்தபுரத்தில் ஒரு வெளிநாட்டவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். திருவனந்தபுரத்தில் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வெளிநாட்டவருக்கு வைரஸ் அறிகுறி இல்லை. அவர் சீனாவில் இருந்து வந்ததால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படும் விதம் திருப்தி அளிக்கிறது" என்றார்.
கேரளா அரசு கொரோனா வைரஸ் பாதிப்பை மாநில பேரிடராக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து அதற்கான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.