சபரிமலை ஐயப்பன் கோயிலில் 3 போலீஸாருக்கு கொரோனா உறுதி.. உச்ச கட்ட எச்சரிக்கையில் பம்பை!
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டிருந்த 3 போலீஸாருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சன்னிதானம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு காவலருக்கும் பம்பையில் நிறுத்தப்பட்டிருந்த இரு காவலர்களுக்கும் என 3 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.
இதுகுறித்து சபரிமலை தேவஸ்தான நிர்வாக அதிகாரி ராஜேந்திர பிரசாத் கூறுகையில் மாளிகைபுரம் கோயில் வாயில், தேவஸ்தான உணவுக் கூட வாயில் அன்னதான மண்டபம் ஆகிய இடங்களில் ஊழியர்களுக்கும் பக்தர்களுக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படவுள்ளது.
சபரிமலையில் பணியில் உள்ள தற்காலிக ஊழியர்கள் உள்பட தேவஸ்தான ஊழியர்கள், அரசு அதிகாரிகளுக்கு கொரோனா சோதனைகள் எடுக்கப்படும். தேவஸ்தான கவுன்ட்டர்களில் உள்ள ஊழியர்கள் முகக் கவசம் அணிந்து பேஸ் ஷீல்டு அணிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிலக்கல் முகாம் வழியாக வரும் பக்தர்களுக்கு அறிகுறி இருப்பின் கொரோனா சோதனை மேற்கொள்ள தனிக்குழுவினர் அமைக்கப்படுவர். அதுவும் பம்பையில் நீராடும் பக்தர்களுக்கும் கொரோனா சோதனை நடத்தப்படும். பம்பை, நிலக்கல் ஆகிய இரு இடங்களில் கொரோனா குறித்து அதிக எச்சரிக்கை மேற்கொள்ளப்படும் என ராஜேந்திர பிரசாத் தெரிவித்தார்.