சபரிமலை தரிசனத்துக்கு அனுமதி கோரி 36 பெண்கள் ஆன்லைனில் விண்ணப்பம்
Recommended Video
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனத்துக்கு அனுமதி கோரி 36 பெண்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்பது உச்சநீதிமன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்பு. இத்தீர்ப்புக்கு எதிராக 60க்கும் மேற்பட்ட மறு ஆய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இம்மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இதனால் இந்த வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றப்பட்டது.
அதேநேரத்தில் சபரிமலைக்கு அனைத்து பெண்களும் செல்லலாம் என்கிற முந்தைய உத்தரவுக்கு தடை ஏதும் விதிக்கப்படவில்லை. இதனால் இந்த ஆண்டும் சபரிமலைக்கு செல்ல பெண்கள் முன்பதிவு செய்து வருகின்றனர்.
இதுவரை 36 பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோவில் தரிசனத்துக்கு அனுமதி கோரி ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் அனைவருமே 10 வயது முதல் 50 வயது பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.