அதிசயம்.. ஒரே நாளில் பிறந்த 4 சகோதரிகளுக்கு ஒரே நாளில் கல்யாணம்.. பூரிப்பில் கேரளா!
நான்கு சகோதரிகளுக்கு ஒரே நாளில் திருமணம் நடக்க உள்ளது
திருவனந்தபுரம்: நம்பிதான் ஆகணும்.. வேற வழியே இல்லை.. ஒரே நாளில் 4 சகோதரிகள் பிறந்தார்கள். அந்த 4 சகோதரிகளுக்கும் ஒரே நாளில் கல்யாணம் நடக்க போகிறது. இந்த சுவாரஸ்யம் கேரளாவில் நிகழ உள்ளது.
கேரளாவைச் சேர்ந்த தம்பதி பிரேம் குமார் - ரமாதேவி. இவர்களுக்கு 1995, நவம்பர் மாதம் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்தன. இதில் 4 பெண்கள், ஒரு ஆண் குழந்தை.
இப்படி ஒரே பிரசவத்தில் 5 குழந்தை பிறக்கவும், அப்போதிருந்தே இந்த குடும்பம் ஊருக்குள் ரொம்பவும் ஃபேமஸ் ஆகிவிட்டது. சோஷியில் மீடியாவில் இவர்களை பற்றின செய்திகள் வந்து கொண்டே இருக்கும்.
சிரமம்
இந்த குழந்தைகளுக்கு பெயரும் ஒரே மாதிரியே வைத்தனர்.. பிரேம் குமார் உத்ராஜா, உத்தாரா, உத்தமா, உத்தரா, உத்ராஜன் என்று பெயர்கள். இப்படி பெயர்கள் மட்டுமல்ல.. இவர்களுக்கு ஒரே மாதிரியான டிரஸ், ஸ்கூல் பேக்குகள்தான்.. இப்படி வாங்குவது பெற்றவர்களுக்கு கொஞ்சம் சிரமமாகவே இருந்தது.
தற்கொலை
குழந்தைகள் ஊர் கண்பட வளர்ந்து வரும் நேரம், ரமாதேவிக்கு நெஞ்சுவலி வந்து பாதிக்கப்பட்டார். குடும்பத்திலும் பண நெருக்கடி ஏற்பட்டது. ஒரு பக்கம் மனைவியின் இதயநோய், மறுபக்கம் வறுமையை கண்டு பொறுக்க முடியாத பிரேம்குமார் 2004-ம் வருஷம் தற்கொலை செய்து கொண்டார். இது ரமாதேவியை இன்னும் புரட்டி போட்டது. குடும்ப நிலைமையை உணர்ந்து அந்த பகுதி மக்கள் உதவி செய்ய.. விஷயம் அரசுக்கு தெரியவர.. இறுதியில், கூட்டுறவு வங்கியில் அரசு வேலை ரமாதேவிக்கு கிடைத்தது.
படிப்பு
இதற்கு பிறகுதான் வறுமை மறைய தொடங்கியது. பிள்ளைகள் 5 பேரும் நன்றாக படித்து முடித்தார்கள். இப்போது கல்யாண வயதையும் எட்டி விட்டார்கள். 4 பெண்களில் ஒருவர் பேஷன் டிசைனர், 2 பேர் மயக்க மருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள், இன்னொருத்தர் எழுத்தாளர். ஆண்பிள்ளை உத்ராஜன் என்ஜினியர். இவர்தான் கல்யாண வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து வருகிறார்.
கல்யாணம்
வரும் ஏப்ரல் மாதம் கல்யாணம் வைத்திருக்கிறார்கள். 4 பெண்களுக்கும் ஒரே நாளில் கல்யாணம் செய்யலாம் என்பது பிரேம்குமாரின் ஆசையாம். அதனால்தான், குருவாயூர் கோயிலில் இந்த கல்யாணத்தை நடத்த போகிறார்கள். அப்போது போலவே இப்போதும் இந்த குடும்பம்தான் சோஷியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது. 4 பேருக்கும் ஒரே நாளில் கல்யாணம் என்பதையும், அவர்களது குழந்தைகளையும் காண கேரள மக்கள் ஆர்வமாகி விட்டனர்.