ஒரே நாளில் 5,000 அரசு ஊழியர்கள் ஓய்வு... திணறும் கேரள அரசு.. காரணம் கேட்டால் தலை சுற்றும்!
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் ஒரே நாளில் 5 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தையும், அதே வேளையில் அரசுக்கு பெறும் நிதி நெருக்கடியையும் கொடுத்துள்ளது.
கேரள அரசு கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதற்காக மசாலா பாண்டுகளை விற்றும் நிதி திரட்டி வருகிறது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 5 ஆயிரம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். இவர்களுக்கான ஓய்வூதிய பலனாக 1,600 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது.
ஓய்வு பலன்களை ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும் என மாநில அரசு நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த ஓய்வூதிய பலன்கள் குறிப்பிட்ட ஒரு மாத காலத்துக்குள் வழங்கப்படவில்லை என்றால் அதற்கு வட்டி செலுத்த வேண்டும். அப்படி வட்டி கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டால் அரசுக்கு மேலும் நிதி சுமை ஏற்படும். இதை தவிர்க்க ஓய்வு பெற்றவர்களுக்கு உரிய பண பலன்களை உரிய நேரத்தில் வழங்க மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது ஒருபுறம் என்றால் எப்படி ஒரே நாளில் 5 ஆயிரம் பேர் ஓய்வு பெற்றனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. கேரள மாநிலத்தைப் பொறுத்தவரை 2013 ம் நிதி ஆண்டு வரை அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 56 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகவே மே 31-ம் தேதியான நேற்றுடன் ஒரே நாளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் என 5 ஆயிரம் பேர் ஓய்வு பெற்றுள்ளனர்.
கேரள மாநிலம் முழுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம், கேரளா மாநிலத்தை தாண்டியும் கவனம் பெற்றுள்ளது. இதுபற்றி ஆராய்ந்தபோது நேற்று ஓய்வு பெற்ற பலருக்கு பிறப்பு சான்றிதழ் கிடையாது. 1980 களுக்கு முன்பு பிறந்தவர்களுக்கு பள்ளிகளில் அட்மிசன் வழங்கும்போது அவர்களிடம் பிறப்பு சான்றிதழ் கேட்கும் பழக்கம் கிடையாது.
மாறாக கல்வி ஆண்டின் துவக்கத்திற்கு முன்னதாக அவர்களது பிறந்த தேதியை குறிப்பிடும் வழக்கம் இருந்தது. கேரளாவில் நேற்று ஓய்வு பெற்றவர்களும் பெரும்பாலும் 1980 களில் பணிகளில் சேர்ந்தவர்கள். இப்படி பிறந்த தேதி கிட்டதட்ட ஒரே மாதிரி வந்ததால் மாதத்தின் கடைசி நாளான நேற்று ஒரே நாளில் 5 ஆயிரம் பேர் ஓய்வு பெற்றுள்ளனர். இந்த சம்பவத்தை மாநில அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் வினியோகிக்கும் ஆன்-லைன் அமைப்பு 'ஸ்பார்க்’ தெரிவித்துள்ளது.