620 கிமீக்கு நீண்ட மனித சங்கிலி.. 70 லட்சம் பேர் பங்கேற்பு.. சிஏஏவிற்கு எதிராக மாஸ் காட்டிய கேரளா!
கேரளாவில் சிஏஏ சட்டத்திற்கு எதிராக 620 கிமீ தூரத்திற்கு மனித சங்கிலி போராட்டம் நடத்தி மாபெரும் சாதனை செய்துள்ளனர்.
திருவனந்தபுரம்: கேரளாவில் சிஏஏ சட்டத்திற்கு எதிராக 620 கிமீ தூரத்திற்கு மனித சங்கிலி போராட்டம் நடத்தி மாபெரும் சாதனை செய்துள்ளனர்.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டம் நடந்து வருகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் பல லட்சம் மாணவர்கள் போராடி வருகிறார்கள். கேரளாவில் இந்த போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்த சிஏஏ சட்டத்தை கேரளா அரசு தீவிரமாக எதிர்த்து வருகிறது. முதலில் சிஏஏவிற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த மாநிலம் கேரளாதான் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சிஏஏவை அமல்படுத்த மாட்டோம் என்றும் கேரள மாநில அரசு குறிப்பிட்டுள்ளது.
போராட்டம் செம
இந்த நிலையில் கேரளாவில் சிஏஏ சட்டத்திற்கு எதிராக 620 கிமீ தூரத்திற்கு மனித சங்கிலி போராட்டம் நடத்தி மாபெரும் சாதனை செய்துள்ளனர். கேரளாவில் வடக்கு பகுதியில் இருந்து தெற்கு பகுதி வரை இந்த போராட்டம் நடந்தது. வரிசையாக மக்கள் எங்கும் விரிசல் விடமால் கையை கோர்த்து போராட்டம் செய்தனர். காசர்கோடு மாவட்டத்தில் இருந்து தமிழகத்தின் களியக்காவிளை வரை போராட்டம் நீடித்தது.
யார் நடத்தியது
இந்த போராட்டத்தில் கேரளாவின் அனைத்து மாவட்ட மக்களும் கலந்து கொண்டனர். அனைத்து மாவட்டம் வழியாகவும் மனித சங்கிலி செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கேரளாவின் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி சார்பாக இது ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்த போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
பிரபலங்கள் கலந்து கொண்டனர்
இந்த மனித சங்கிலி போராட்டத்தில் சிஏஏவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இன்று திருமணம் ஆன தம்பதிகள் பலர் இதில் கலந்து கொண்டனர். அதேபோல் மாணவர்கள், முதியவர்கள், வெளிநாட்டினர் கூட இந்த சங்கிலியில் கலந்து கொண்டனர். அதேபோல் கேரளாவை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். சிஏஏவை எதிர்க்கும் கேரளாவை சேர்ந்த நடிகர், நடிகைகள் பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஏற்கனவே இப்படி
இந்த போராட்டத்தில் மொத்தம் 70 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இந்த மனித சங்கிலி மாலை 4 மணிக்கு துவங்கி 5 மணி வரை நீடித்தது. பாலம், சாலை, குன்றுகள் என்று எந்த தடையையும் இன்றி பாலம் நீண்டு சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த மாபெரும் மனித சங்கிலியை வானத்தில் இருந்து பார்த்தால் கூட தெரியும் என்கிறார்கள். ஏற்கனவே சபரிமலை தீர்ப்பிற்கு ஆதரவாக அம்மாநில அரசு இப்படி மனிதசங்கிலி போராட்டம் செய்தது குறிப்பிடத்தக்கது.