கோழிக்கோடு விமான விபத்தில் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய 7 வயது இரட்டையர்கள்!
திருவனந்தபுரம்: துபாயிலிருந்து தனது தாயுடன் கோழிக்கோடு புறப்பட்ட 7 வயது இரட்டையர்கள் விமான விபத்திலிருந்து உயிருடன் மீண்டுள்ளனர். இருவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்கள்.
கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று ரன்வேயில் இறங்கிய போது சறுக்கி விழுந்து இரண்டாக பிளந்தது. இந்த விபத்தில் விமானி, இணை விமானி உள்பட 19 பேர் உயிரிழந்தனர்.
இந்த விமானத்தில் தாயுடன் பயணம் செய்த 7 வயது இரட்டையர்கள் சிறிய காயத்துடன் உயிர் தப்பிய சம்பவம் நடந்துள்ளது. மலப்புரத்தைச் சேர்ந்தவர்கள் ஜெய்ன், ஜெமில் குண்டோட் பாரக்கல். இவர்களது தாய் உயிர் பிழைத்துள்ளாரா என தெரியவில்லை.
தனது தாயின் பெயரை இரு குழந்தைகளும் கூறியுள்ளனர். அதை வைத்து அவரை தேடும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. இருவருக்கும் காலில் லேசான காயங்கள் உள்ளன. அவர்களுடைய குடும்பத்தினர் யாரும் இல்லை. இதனால் உறவினர் ஒருவர் மருத்துவமனையில் இருந்து அவர்களை அழைத்து சென்றுள்ளார். இந்த விமானத்தில் இந்த சிறுவர்கள் உள்பட 50 சிறுவர்கள் பயணம் செய்துள்ளனர்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விபத்தில்லாமல் 9 ஆண்டில் கரிப்பூர் விமான நிலையத்தில் 4 விபத்துகள்.. எப்படி?
இவர்களது தந்தை துபாயில் இருக்கிறார். அவரை பார்க்க தனது தாயுடன் இருவரும் துபாய் சென்றதும் அங்கு கொரோனா லாக்டவுனால் தாயகம் திரும்ப முடியாததும் வந்தே பாரத் மூலம் மீட்கப்பட்டதும் தெரியவந்தது. அவர்களது குடும்பத்தை சேர்ந்த வேறு யாரேனும் பயணம் செய்தனரா என தெரியவில்லை.