பிரிட்டனிலிருந்து கேரளா வந்த 8 பேருக்கு கொரோனா.. ஆய்வுக்காக மாதிரிகள் புனேக்கு அனுப்பி வைப்பு
திருவனந்தபுரம்: கடந்த ஒரு வாரத்தில் பிரிட்டனிலிருந்து கேரளா திரும்பிய 8 பேருக்கு, கோவிட் -19 பாசிட்டிவ் என்று தெரியவந்துள்ளது.
மேலும் அவர்களிடம் சேகரித்த மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் காணப்படும் புதிய வகை உருமாற்றம் கொண்ட வைரசா என்று அறிந்து கொள்ள புனேவுக்கு அனுப்பப்பட்டதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.சைலஜா தெரிவித்தார்.
கேரளாவின் நான்கு விமான நிலையங்களிலும் விழிப்புணர்வு அதிகரிக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சைலஜா தெரிவித்தார்.
கேரளா கொரோனா நோயாளிகளிடையே வைரஸில் சில மாறுபாடுகள் இருப்பதை நாங்கள் கவனித்திருக்கிறோம். ஆனால் இது இங்கிலாந்தில் பாதிப்பை ஏற்படுத்திய வைரசுடன் தொடர்புடையதா என்று தெரியாது. நிபுணர்கள் இது குறித்து விரிவான ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர் என்று சைலஜா கூறியுள்ளார்.
இந்தியாவில் ஆறு மாதங்களாகத் தொடர்ந்து குறையும் கொரோனா உயிரிழப்புகள்
அதேநேரம், மக்கள் பீதி அடையத் தேவையில்லை, ஆனால் மக்கள் தீவிர விழிப்புணர்வைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
கடந்த வாரம், இங்கிலாந்தின் சுகாதாரத் துறை அதன் மரபணு பகுப்பாய்வு மற்றும் தொற்றுநோயியல் தரவுப்படிகள்படி, தங்கள் நாட்டில் வழக்கத்தை விட 70% வேகமாக பரவக்கூடிய கொரோனா வைரஸ் இருப்பதாக கூறியிருந்தது.
இருப்பினும், லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசினில் தொற்று நோய்களின் கணித மாடலிங் மையம் நடத்திய ஆய்வில் இந்த பரவல் விகிதம் 56% என்ற அளவில் இருப்பதாக கூறப்பட்டது. எனவே தமிழகம் உட்பட நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் விமான நிலையங்களில் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.