கேரளாவை உலுக்கும் நிபா வைரஸ்.. அறிகுறிகள் என்ன? தடுக்கும் முறை எப்படி?
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் 'நிபா' வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 22 கல்லூரி மாணவர் உட்பட 80க்கும் அதிகமானோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு கேரளாவை ஆட்டிப்படைத்தது நிபா வைரஸ். 17 பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியாகினர். இந்த நிலையில் இந்த வருடம் மீண்டும் கேரளாவில் தீவிரமாக நிபா பாதிப்பு பரவி வருகிறது.
வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக கேரள அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள் புனே நகரில் உள்ள virology துறைக்கு அனுப்பப்பட்டு சோதித்து பார்க்கப்பட்டது.
சிகிச்சை
அதில், அவர்களுக்கு நிபா வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா நிருபர்களிடம் கூறுகையில், இதுவரை கேரளாவில் 86 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் மருத்துவமனையில் தனிப்பிரிவில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
அமைச்சர் நம்பிக்கை
நிபா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கேரள மாநில அரசு எடுத்துள்ளது. கடந்த வருடம் கோழிக்கோடு பகுதியில் இதே போன்ற வைரஸ் தாக்கம் ஏற்பட்ட போது, அதை சமாளித்து அனுபவம் எங்களுக்கு இருப்பதால், பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்தார்.
கட்டுப்பாடு
நிபா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளோரில் 22 பேர் கல்லூரி மாணவர்கள் என்பது கவலை தரக்கூடிய மற்றொரு விஷயமாக பார்க்கப்படுகிறது. அதேநேரம் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக கேரள அரசு திரும்ப திரும்ப சொல்லி வருவது ஆறுதல் அளிக்கக் கூடிய விஷயமாக உள்ளது.
நிபா அறிகுறி
கடந்த வருடம் கேரளாவில் நூற்றுக்கணக்கானோருக்கு, நிபா பாதிப்பு ஏற்பட்டது. அதில் சிகிச்சை பெற்ற பலரும் தேறிவிட்டனர். ஆனால், 17 பேர் பலியாகினர். நிபா வைரஸ், பாதிப்புள்ளோருக்கு காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி, வாந்தி போன்றவை அறிகுறிகளாகும். ரத்த பரிசோதனை மூலம், பாதிப்பு உறுதியானால் தக்க சிகிச்சை பெற வேண்டும். வவ்வால்கள் மூலமாக இந்த வைரஸ் பரவுகிறது. எனவே வவ்வால் கடிக்காத பழங்களை மட்டுமே உணவுக்கு பயன்படுத்த வேண்டும்.
வங்கதேசம்
கேரளாவில் இந்த பாதிப்பு வருவதற்கு முன்பாக, ஆசிய நாடுகளில் கடைசியாக இந்த பாதிப்பு 2004 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் ஏற்பட்டது. அதன் பிறகு இந்த வைரஸ் தாக்கம் எங்குமே இல்லாத நிலையில் கடந்த வருடமும், இந்த வருடமும் மீண்டும் கேரளாவில் அதேபோன்ற ஒரு தாக்கம் ஏற்பட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.