குருவாயூர் கோவில் உண்டியலில் துப்பாக்கி குண்டு... தீவிர விசாரணை
திருவனந்தபுரம்: குருவாயூர் கோவில் உண்டியலில் துப்பாக்கி குண்டு கண்டெடுக்கப்பட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கி குண்டை காணிக்கை செலுத்தக் கூடிய உண்டியலில் போட்டுவிட்டு சென்றது யார் என்பது பற்றி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உண்டியலில் விழுந்த காணிக்கையை எண்ணிய போது, அதில் துப்பாக்கி குண்டும் கிடந்தது கண்டறியப்பட்டது.
புகழ்பெற்ற கோவில்
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூரில் உலகப் புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவில் உள்ளது. அந்தக் கோவிலுக்கு கேரளா மட்டுமின்றி தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக சென்று வருகின்றனர். துலாபாரம் நேர்த்திக்கடன் செலுத்துவது இந்தக் கோவிலின் சிறப்பம்சமாகும்.
துப்பாக்கி குண்டு
குருவாயூர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையானது மாதம்தோறும் திறக்கப்பட்டு எண்ணப்படும். அந்தவகையில் அக்டோபர் மாதம் பக்தர்கள் செலுத்திய காணிக்கை தொகையை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. அப்போது, பணத்துடன் துப்பாக்கி குண்டும் இருந்ததால் அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கோவில் ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
சிசிடிவி கண்காணிப்பு
இதையடுத்து அந்த குண்டை ஆய்வு செய்ததில் அது, 9 எம்.எம். ரக கைதுப்பாக்கியில் பயன்படுத்தும் குண்டு எனத் தெரியவந்துள்ளது. அதை யார் உண்டியலில் போட்டார்கள் என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தி வரும் போலீஸார், சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
அச்சுறுத்தல்
குருவாயூர் கோவிலுக்கு ஏற்கனவே பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது அது மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் எந்நேரமும் ஈடுபடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.