அம்மா தாயே.. கோபப்படாம வந்த வழியாகவே போய்ரும்மா.. கொரோனாவுக்கு கோவில் கட்டிய அனிலன்!
திருவனந்தபுரம்: குஷ்புவுக்கு கோயில் கட்டியது அந்த காலம்.. கொரோனாவுக்கு கோயில் கட்டுவதுதான் இன்றைய டிரென்டிங்.. கேரளாவில் ஒருவர் கோவிட் 19 சிலையை நிறுவி அதற்கு பூஜை, புனஸ்காரம் செய்து வருகிறார்.
சீனாவின் வுகானில் இருந்து பரவிய கொரோனா எனும் கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பரவி இன்று 76 லட்சம் பேரை பாதித்துள்ளது. இதனால் 4.25 லட்சம் பேர் பலியாகிவிட்டனர். இந்த நோயை கண்டு வல்லரசு நாடுகளே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.
எப்போதும் உலகில் ஒரு இன்னல் ஏற்பட்டால் அவரவர் மத நம்பிக்கைகளுக்கு ஏற்ப வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க கோயில்களும் மூடப்பட்டுவிட்டன. இதனால் எந்த கோயிலிலும் சென்று வழிபட முடியாத நிலை உள்ளது.
இத்தாலியும், நியூயார்க்குமே தப்பியாச்சு, சென்னைவாசிகளே ஹேப்பியா இருங்க! உற்சாக 'மாஸ்க்' ஆய்வு முடிவு
கட்டுப்பாடுகள்
இந்த நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் சமூக இடைவெளியுடன் அச்சம் கொண்டே சாமி கும்பிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் இருந்து 44 கி.மீ. தூரத்தில் உள்ளது கடக்கல் என்ற இடம்.
கொரோனா போராளிகள்
இங்கு கொரோனா தேவிக்கு ஒருவர் ஆலயத்தை உருவாக்கியுள்ளார். கொரோனா வைரஸின் உருவத்தை சிலையாக வடிவமைத்து அனிலன் என்பவர் உருவாக்கி பூஜை செய்து வருகிறார். கொரோனா போராளிகளுக்காக தினமும் பூஜை செய்து வழிபடுகிறார்.
33 கோடி கடவுள்கள்
இதுகுறித்து அனிலன் செய்தியாளர்களுக்கு கூறுகையில் SARS COV-2 என்ற வைரஸை போன்ற தோற்றம் கொண்ட இந்த கொரோனா தேவி சிலையில் சிகப்பு நிற கூம்பு வடிவ விழுதுகள் காணப்படுகின்றன. இதை தெர்மாகோலில் வடிவமைத்துள்ளேன். 33 கோடி இந்து கடவுள்கள் இருக்கும் நிலையில் கூடுதலாக மேலும் ஒரு கடவுள்.
அரசியல் ஆதாயம்
தொற்றுநோய்க்கு எதிரான போரில் ஈடுபடும் அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக தெய்வத்தின் முன் பூஜைகளை நடத்துகிறேன். கோயில்கள் மீண்டும் திறப்பதில் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் தரிசனம் ஏதும் இல்லை. தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக மக்கள் தற்போது கடவுள்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
மூல மந்திரம் இல்லை
ஆனால் இப்போது கோயில்களுக்கு செல்ல நேரமில்லை. உயிர் பிழைத்தால் போதும் என உள்ளது. இந்த கடவுளுக்கு எந்த மூல மந்திரமும் இல்லை. கேரளாவில் அம்மை நோய், இதர வைரஸ் நோய்களுக்கான தெய்வங்கள் உள்ளன. இது யாரையும் கேலி செய்யும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது அல்ல. அனைத்து வகையான பூஜைகளையும் அர்ப்பணிப்புடன் செய்து வருகிறேன்.
Recommended Video
கட்டணம் இல்லை
கடவுள் எங்கும் இருக்கிறார் என புராணங்கள் கூறுகின்றன. அதன்படி வைரஸில் கூட இருப்பார். ஒரு வைரஸை தேவி என வழிபடுவது புதிதான மரபு அல்ல. கொரோனா தேவியை தரிசனம் செய்ய விரும்புவோர் மின்னஞ்சல் மூலம் தரிசனம் செய்யலாம். யாருக்கேனும் கொரோனா தேவியிடம் பூஜித்த பிரசாதம் வேண்டுமென்றால் என்னை தொடர்பு கொள்ளலாம். இதற்காக நான் எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை என்றார் அனிலன்.