மூணாறு.. சோறு தண்ணி இல்லாமல் 5 நாளாக எஜமானரை தேடும் நாய்.. ஒவ்வொரு உடலையும் பார்த்து ஏமாறும் சோகம்
இடுக்கி: மூணாறு ராஜமலை நிலச்சரிவு மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் பகுதியில் ஒரு நாய் தனது எஜமானரை மூன்று நாள்களாக தேடி வருகிறது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை நல்ல மழை பொழிவை கொடுத்து வருகிறது. கேரளாவின் இடுக்கி, ஆலப்புழா, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கேரளாவில் இருந்த நீர் நிலைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் கடவுளின் தேசம் தண்ணீரில் மிதக்கிறது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மூணாறு பகுதியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில் மூணாறை அடுத்த ராஜமலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் அங்கு தங்கியிருந்த தமிழகத்தைச் சேர்ந்த தேயிலை தொழிலாளர்களின் வீடுகள் அப்படியே அமுங்கின.
மூணாறு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 50-ஆக உயர்வு.. சவாலான சூழலில் 5வது நாளாக மீட்பு பணி
ராஜமலை பகுதி
இந்த நிலச்சரிவில் 80-க்கும் மேற்பட்டோர் புதைந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதிலிருந்து 50 பேரின் உடல்கள் தற்போது வரை மீட்கப்பட்டுள்ளன. ஆயினும் மழை காரணமாக அவ்வப்போது தொய்வு ஏற்படுவதால் இன்று 5-ஆவது நாட்களாக மீட்பு பணிகள் நடைபெறுகின்றன. தங்கள் உறவினர்களை தேடி தமிழகத்தின் கயத்தாறு, கோவில்பட்டி பகுதி மக்கள் ராஜமலை பகுதியில் கண்களில் குளம் போன்ற கண்ணீருடன் குவிந்துள்ளார்கள்.
தேடி வரும் நாய்
எங்காவது நம் உறவினர் உயிருடன் இருக்கமாட்டாரா என்ற ஏக்கமும் அவர்கள் கண்களில் தெரிகிறது. இந்த நிலையில் அப்பகுதியில் கடந்த 5 தினங்களாக ஒரு நாய் தனது எஜமானரை தேடி சுற்றி சுற்றி வருகிறது. ஒவ்வொரு உடலையும் மீட்பு படையினர் மீட்கும் போது அது நம்மை வளர்த்த எஜமானரா, நமக்கு உப்பிட்டவரா என ஓடி போய் பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி வருகிறது.
அலசும் நாய்
இந்த நாயை வளர்த்த தொழிலாளியின் குடும்பமே மண்ணுக்குள் புதைந்துவிட்டது. பேரிடரில் இருந்து தப்பித்த இந்த நாய் தன்னுடைய எஜமானர் இந்த மண்ணின் கீழ் எங்காவது இருக்கிறாரா என்று கண்டுபிடிக்க முழு பேரழிவு பகுதியையும் அலசி வருகிறது. கடந்த மூன்று நாட்களாக, இந்த நாய் எல்லோரையும் போலவே தன்னை வளர்த்தவர்கள் உடலைக் காண்பதற்காக அங்கேயே இருந்து வருகிறது.
நாயின் பாசமும் பரிதவிப்பும்
இதை பார்க்கும் மீட்பு படையினர் நாயின் பாசத்தை பார்த்து மெய்சிலிர்த்து போயினர். ஒவ்வொரு உடலை எடுக்கும் போது இந்த நாய் ஓடி வந்து பார்ப்பது அங்கிருப்போர் கண்களை குளமாக்கி வருகிறது. அதன் பாசமும் பரிதவிப்பும் மீட்பு படையினரை கரைய வைக்கிறது. மேலும் உணவில்லாமல் தவித்து வரும் இந்த நாய்க்கு அங்கிருக்கும் மக்களும் மீட்பு படையினரும் உணவு கொடுத்தால் அதை சாப்பிடுவதில் சிறிதும் ஆர்வம் காட்டாமல் தனது எஜமானரை தேடி வருகிறது.