என் மகனுக்காக உதவினேன்.. 61 பேரை விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த தந்தை.. உருக வைக்கும் கதை
துபாயில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த டிஎன் கிருஷ்ணகுமார் என்ற நபர், அமீரகத்தில் சிக்கி தவித்த கேரளாவை 61 பேருக்கு சொந்த ஊருக்கு செல்ல விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்துள்ளார்.
திருவனந்தபுரம்: துபாயில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த டிஎன் கிருஷ்ணகுமார் என்ற நபர், அமீரகத்தில் சிக்கி தவித்த கேரளாவை 61 பேருக்கு சொந்த ஊருக்கு செல்ல விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்துள்ளார்.
கொரோனா காரணமாக இந்தியர்கள் பலர் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. அதிலும் மத்திய கிழக்கு நாடுகளில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சிக்கி தவித்து வருகிறார்கள். இதில் மலையாளிகள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இப்படி அரபு நாடுகளில் சிக்கி தவிக்கும் மலையாளிகளை மீட்டு கேரளாவிற்கு அனுப்பி வைக்க டிஎன் கிருஷ்ணகுமார் உதவி இருக்கிறார். துபாயில் கடந்த 32 வருடமாக இருக்கும் இவர், தனது மாநில மக்களுக்கு உரிய நேரத்தில் உதவி உள்ளார்.
இஷ்டத்திற்கு பேசினால் காங்கிரஸ் கட்சியை யார் மதிப்பார்கள்... கே.எஸ்.அழகிரி வேதனை
என்ன செய்தார்
அரபு நாடுகளில் இருந்து கேரளா செல்ல சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த சிறப்பு விமானங்களின் கட்டணம் மிக அதிகமாக இருப்பதால், பலர் அந்த விமானத்தில் டிக்கெட் எடுக்க முடியாத நிலைக்கு சென்றுள்ளனர். இப்படி டிக்கெட் எடுக்க பணம் இல்லாமல், ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கி இருக்கும் நபர்களை தேடி பிடித்து டிஎன் கிருஷ்ணகுமார் உதவி உள்ளார். மொத்தம் 61 பேரை இப்படி இவர் தேர்வு செய்துள்ளார்.
அனுப்பி உள்ளார்
முதலில் 6 பேருக்கு டிக்கெட் எடுத்துக்கொடுத்து அவர்கள் சொந்த ஊர் செல்ல உதவி இருக்கிறார். அதன்பின் மற்றவர்களுக்கும் உதவ வேண்டும் என்று முடிவு செய்து, தனது கல்லூரியின் அலுமினி வாட்ஸ் ஆப் குழுவில் இதை பற்றி குறிப்பிட்டுள்ளார். அவர்களும் இவரின் திட்டத்தை ஏற்றுக்கொண்டு உதவ முன் வந்துள்ளனர். மொத்தம் 191 பேரை அமீரகத்தில் இருந்து கேரளா அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.
டிக்கெட் எடுத்தார்
ஏற்கனவே 6 பேரை இவர் ஊருக்கு அனுப்பி இருந்த நிலையில், இந்த டிரிப்பில் 55 பேருக்கு இவர் டிக்கெட் எடுத்துள்ளார். மொத்தம் இதற்காக தனது சொந்த காசு 14 லட்சத்தை செலவு செய்து இருக்கிறார். ஃபிளைதுபாய் விமானத்தில் டிக்கெட் புக் செய்து எல்லோரையும் இவர் வீட்டிற்கு அனுப்பி உள்ளார். கடந்த 25ம் தேதி கேரளா அனுப்பப்பட்ட இவர்கள் இப்போது கொச்சியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
யார் இவர்
கேரளாவை சேர்ந்த டிஎன் கிருஷ்ணகுமார் 32 வருடமாக துபாயில் இருக்கிறார். துபாயில் இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரிவில் பணியாற்றுகிறார். மக்களுக்கு உதவ வேண்டும் என்று நினைத்து இப்படி செய்ததாக குறிப்பிட்டுள்ளார். என்னுடைய மகன் கடந்த வருடம் கார் விபத்து ஒன்றில் பலியாகிவிட்டான். அவன் நினைவில் இவர்களுக்கு உதவி செய்தேன்.
பலர் இருக்கிறார்கள்
அரபு நாடுகளில் இந்தியர்கள் பலர் இப்படி சிக்கி உள்ளனர். அவர்களை எல்லாம் மீட்க வேண்டும். அவர்களுக்கு டிக்கெட் எடுக்க காசு இல்லை. அவர்களின் பொருளாதாரம் அப்படி. அதனால் அவர்களுக்கு உதவ யோசித்தேன். நான் மட்டும் இப்படி உதவவில்லை. இது ஒரு கூட்டு முயற்சி. என்னுடன் பலர் இப்படி உதவி செய்தனர். அவர்கள் எல்லோருக்கும் நன்றி என்று டிஎன் கிருஷ்ணகுமார் குறிப்பிட்டு இருக்கிறார்.
கேரளா வெள்ளம்
கேரளாவில் வெள்ளம் ஏற்பட்ட போதும் கூட இதேபோல் இவர் கேர்ளாவில் இருக்கும் மக்களுக்கு உதவினார். நிதி உதவியை அனுப்பி, மக்களுக்கு பொருட்களை விநியோகம் செய்ய வைத்தார். அதேபோல் கேரளாவில் எப்போது இயற்கை பேரிடர் ஏற்பட்டாலும் அப்போதெல்லாம் கிருஷ்ணகுமார் உதவி இருக்கிறார்.துபாயில் வசிக்கும் இவர் எங்கே சென்றாலும்.. தனது கடவுள் தாய்வீட்டை மறக்காமல் தனது சொந்த மக்களுக்காக உதவி வருகிறார்!