எம் மக்களுக்கு உழைப்பேன்.. சிவில் சர்வீஸ் தேர்வில் வென்ற கேரள பழங்குடி பெண்.. மலைக்க வைக்கும் கதை!
கேரளாவில் பழங்குடி இனத்தை சேர்ந்த பெண் ஸ்ரீதன்யா சுரேஷ் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று துணை ஆட்சியராக பொறுப்பேற்று இருப்பது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
திருவனந்தபுரம்: கேரளாவில் பழங்குடி இனத்தை சேர்ந்த பெண் ஸ்ரீதன்யா சுரேஷ் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று துணை ஆட்சியராக பொறுப்பேற்று இருப்பது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
கொரோனாவிற்கு எதிராக மிக தீவிரமான போராட்டம் மற்றும் அதற்கு எதிரான வெற்றி காரணமாக உலகமே கேரளாவை திரும்பி பார்த்துக்கொண்டு இருக்கிறது. வல்லரசு நாடுகள் சாதிக்க முடியாததை கேரளா எப்படி சாதித்தது என்று இப்போதும் உலகம் முழுக்க கேள்வியாக உள்ளது.
உலகமே இப்படி ஆச்சர்யத்தில் இருக்கும் போது கேரளாவை ஆச்சர்யப்பட வைத்துள்ளார் 25 வயதே ஆன பழங்குடி சமுதாயத்தை சேர்ந்த பெண் ஸ்ரீதன்யா சுரேஷ். மிக இளம் வயதில், மிக மோசமான சூழ்நிலை மற்றும் பின்புலத்திற்கு மத்தியில் அவர் தற்போது துணை ஆட்சியராக பொறுப்பேற்று இருக்கிறார்.
யார் இவர்?
ஸ்ரீதன்யா சுரேஷ் கேரளத்தின் வயநாடு மாவட்டத்தை சேர்ந்தவர். பழங்குடிகள் மற்றும் ஆதிவாசிகள் அதிகம் வசிக்கும் பொழுதானா கிராமத்தை சேர்ந்தவர்தான் ஸ்ரீதன்யா சுரேஷ். பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாத, சரியான மின்சார வசதி, உணவு வசதி, பள்ளி கல்வி உட்பட அடிப்படை வசதிகள் பெரிதாக சென்று சேராத கிராமம்தான் அது. அந்த கிராமத்தில் மிகவும் பின்தங்கிய வகுப்பான குறிச்சியா சமுதாயத்தில் பிறந்தவர் ஸ்ரீதன்யா சுரேஷ்.
பின்தங்கிய சமூகம்
இவ்வளவு பின் தங்கிய சமுதாயத்தை சேர்ந்த ஸ்ரீதன்யா சுரேஷ்தான் தற்போது துணை ஆட்சியராக கேரளாவில் பொறுப்பேற்று இருக்கிறார். தன்னுடைய மூன்றாவது முயற்சியில் அவர் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்று துணை கலெக்டர் ஆகி உள்ளார். இவரின் அப்பா ஒரு தினக்கூலி தொழிலாளி. உணவுக்காக மார்க்கெட்டில் வில் அம்பு விற்று பிழைத்து வருகிறார். அந்த வருமானத்தில்தான் ஸ்ரீதன்யாவின் அப்பா சுரேஷ் அவரை படிக்க வைத்தார்.
அடிப்படை வசதி இல்லை
சிறு வயதில் இருந்து கழிவறை தொடங்கி போதுமான உணவு வரை எந்த விதமான அடிப்படை வசதியும் இல்லாமல்தான் ஸ்ரீதன்யா சுரேஷ் வளர்ந்தார். எந்தவிதமான நிலையான வருமானமும் இல்லாத இந்த குடும்பம் அது. மகாத்மா காந்தி தேசிய கிராமிய வேலைவாய்ப்பு உத்தரவாதம் திட்டத்தின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக வருமானம் பெற்று பிழைத்து வந்துள்ளனர். இன்னும் முழுதாக கட்டி முடிக்கப்படாத கல் வீட்டில்தான் ஸ்ரீதன்யா சுரேஷ் வசிக்கிறார்.
கிளர்க் பணி
இந்த மோசமான சூழ்நிலையில் கூட கொஞ்சம் கொஞ்சமாக பள்ளி படிப்பை முடித்து, கோழிக்கூட்டில் கல்லூரியில் சேர்ந்தார் அவர். கோழிக்கோட்டில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் விலங்கியல் படித்தார். பின் கோழிக்கோடு பல்கலையில் மேற்படிப்பு முடித்துவிட்டு உடனே குடும்பத்தை காப்பதற்காக பணியில் சேர்ந்து இருக்கிறார். அரசு தேர்வு எழுதி, உடனே கிளர்க் பணியில் சேர்ந்துள்ளார்.
கேரளாவின் பழங்குடியினர் மேம்பாட்டுத் துறை
கேரளாவின் பழங்குடியினர் மேம்பாட்டுத் துறையின் கீழ் கிளர்க் பொறுப்பில் பணியில் சேர்ந்துள்ளார். அங்கு போதிய வருமானம் கிடைக்காத காரணத்தாலும், வேலை பார்க்க சரியான சூழ்நிலை அமையாததாலும் உடனே வயநாட்டில் இருக்கும் ஆதிவாசி விடுதி ஒன்றில் வார்டனாக சேர்ந்துள்ளார். அங்கிருந்து கொண்டே சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு தீவிரமாக படித்துள்ளார். அப்பாவின் ஆசைப்படியே சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு தயாராகி உள்ளார் .
செம வாய்ப்பு
அப்போதுதான் இவருக்கு வயநாடு ஆட்சியர் ஸ்ரீராம் சமசிவா ராவை சன்னதிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த பெண்ணிடம் திறமை இருப்பதை உணர்ந்து கொண்ட ஆட்சியர் ஸ்ரீராம் சமசிவா ராவ் அவருக்கு ஐஏஎஸ் படிக்கும்படி உத்வேகம் அளித்துள்ளார். உன்னால் முடியும், போய் படி, இந்த வார்டன் வேலை எல்லாம் வேண்டாம். போய் தீவிரமாக படித்து தேர்வு எழுது என்று ஊக்குவித்துள்ளார். இதனால் உடனே வேலையை விட்டுவிட்டு ஸ்ரீதன்யா திருவனந்தபுரம் சென்றுள்ளார்.
தொடர்ந்து இரண்டு முறை
திருவனந்தபுரத்தில் முழுமூச்சாக சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காக படித்துள்ளார். ஆனால் வெற்றி உடனே இவரின் வாய்ப்பை தட்டவில்லை. 2016 மற்றும் 2017 வருடங்களில் அடுத்தடுத்து இரண்டு முறை சிவில் சர்வீஸ் தேர்வு எழுதியுள்ளார். இரண்டு முறையும் பெரிய அளவில் மதிப்பெண்களை எடுக்காமல் தோல்வியை தழுவி இருக்கிறார். ஆனால் கொஞ்சம் கூட மனம் தளராமல் ஸ்ரீதன்யா தொடர்ந்து மீண்டும் 2018ல் முயற்சி எடுத்தார்.
பணம் இல்லை
இதுதான் கடைசி முயற்சி எப்படியாவது வெல்ல வேண்டும் தனக்கு தானே கட்டுப்பாட்டை விதித்துக் கொண்டு தீவிரமாக படித்து 2018ல் தேர்வை எழுதியுள்ளார். இந்த எழுத்து தேர்வு முடிவில் இரண்டிலும் வெற்றிபெற்றவருக்கு சென்ற வருடம் நேர்முக தேர்வுக்கு டெல்லிக்கு அழைப்பு வந்துள்ளது. ஆனால் டெல்லி செல்ல இவரிடம் பணம் இல்லை. இதனால் அவரின் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து 40 ஆயிரம் ரூபாய் இவருக்கு கொடுத்து உதவி உள்ளனர்.
செம சாதனை
டெல்லி சென்று நேர்முக தேர்வில் கலந்து கொண்டவர் அதிலும் வெற்றிபெற்று உள்ளார். அதோடு தேசிய அளவில் சிவில் சர்வீஸ் தேர்வில் 410வது இடம் பிடித்து சாதனை படைத்து இருக்கிறார். இதன் மூலம் வயநாட்டில் இருந்து பழங்குடி மக்கள் சார்பாக தேர்வான ஒரே ஐஏஎஸ் அதிகாரி என்ற சாதனையை ஸ்ரீதன்யா படைத்துள்ளார். இவருக்கு வயநாடு எம்பி ராகுல் காந்தி தொடங்கி கேரளா முதல்வர் பினராயி விஜயன் வரை வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
அதே ஆட்சியர்
தற்போது முசூரியில் பயிற்சியில் இருக்கும் ஸ்ரீதன்யா கேரளா வந்தபின் துணை ஆட்சியர் பொறுப்பில் பதவி ஏற்க இருக்கிறார். கோழிக்கோடு துணை ஆட்சியராக ஸ்ரீதன்யா பொறுப்பேற்க உள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஸ்ரீதன்யா பொறுப்பேற்கும் கோழிக்கோட்டின் தற்போதைய ஆட்சியர் ஸ்ரீராம் சமசிவா ராவ்தான். ஆம் ஸ்ரீதன்யாவை ஐஏஎஸ் ஆக தூண்டுதலாக இருந்த அதே ஸ்ரீராம் சமசிவா ராவ் கீழ்தான் ஸ்ரீதன்யா தனது முதல் பணியில் சேர்கிறார்.
உழைப்பேன்
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஸ்ரீதன்யா, நான் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்தேன். எங்கள் இனத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இல்லை. வயநாட்டிலும் மிக குறைவாகவே ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள். நான் இப்போது இவர்களின் குரலாக ஒலிக்க போகிறேன் என்பது மகிழ்ச்சி. எங்கள் பழங்குடி மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பது மட்டும்தான் இப்போது என்னுடைய ஒரே குறிக்கோள் என்று ஸ்ரீதன்யா சந்தோசமாக தெரிவித்துள்ளார்.. பல விஷயங்களில் முன்மாதிரியாக திகழும் கேரளாவில் இருந்து ஸ்ரீதன்யா மூலம் இன்னொரு வெளிச்சம் இந்தியா முழுமைக்கு பாய்ந்துள்ளது!