உக்ரைன் நாட்டில் வசிக்கும் இளைஞருடன் ஆன்லைனில் கல்யாணம் முடித்த இளம் பெண்
திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த உக்ரைனில் வசிக்கும் இளைஞரை , கேரள இளம் பெண் ஆன்லைனில் மணமுடித்துள்ளார். இந்த திருமணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்தது. ஆன்லைனில் திருமணம் நடப்பது கேரளாவில் இதுவே முதல்முறையாகும்,
திருமணங்கள் என்பது மணமகன், மணமகள் சேர்ந்து செய்யும் சடங்கு. இந்த பாழாய் போன கொரோனா 90ஸ் கிட்ஸ் இளைஞர்களின் கனவை நசுக்கிவிட்டது. அதில் தப்பித்தவர்கள் சிலரே. குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் இந்திய இளைஞர்கள் திருமணத்திற்கு கூட வர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்தியாவிற்கு செல்ல விமானம் இல்லாதது. அப்படியே இருந்தாலும், அங்கிருந்து வந்துவிட்டு மீண்டும் செல்வதற்கு விமானம் இல்லாதது போன்ற காரணங்களால் வர முடியாத நிலையில் பல திருமண ஜோடிகள் தவிக்கின்றன. இந்நிலையில் ஓரளவு நிலைமை சரியாகி இப்போது தான் உலகம் இயல்பு நிலை நோக்கி வந்தது. ஆனால் கொரோனா 3வது அலை பல நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
கொரோனா பாதிப்பு: இந்தியாவில் 2 ஆண்டுகள் குறைகிறது சராசரி ஆயுட் காலம்!
உக்ரைன்
இதன் காரணமாக மீண்டும் பல்வேறு நாடுகள் பயணத்தடை விதித்துள்ளன. இந்நிலையில் கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் புனலூரை சேர்ந்தவர் ஜீவன்குமார். இவர் உக்ரைன் நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், திருவனந்தபுரம் கழக்கூட்டத்தை சேர்ந்த தன்யாவுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
கேரளா வரவில்லை
இருவரும் கடந்த மார்ச் மாதம் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்ய புனலூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஜீவன்குமாரால் குறிப்பிட்ட நாளில் சொந்த ஊரான கேரளாவுக்கு வர இயலவில்லை. இதையடுத்து ஆன்லைன் மூலம் திருமணத்தை நடத்த அனுமதிக்கக்கோரி இருவரும் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
அனுமதி
இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் இது தொடர்பாக வெளியுறவு துறை, தகவல் தொழில் நுட்பத்துறையிடம் கருத்து கேட்டது. இதை பரிசீலித்த இரு துறைகளும் ஆன்லைன் மூலம் திருமணத்தை நடத்த அனுமதி வழங்கியது. இதையடுத்து சனிக்கிழமை புனலூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் வைத்து திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி மணமகள் தன்யா, மணமகன் ஜீவன்குமாரின் தந்தை தேவராஜன் மற்றும் இருவீட்டார் உறவினர்கள் வந்திருந்தனர்.
ஆன்லைனில் தயார்
இதே வேளையில் உக்ரைன் நாட்டில் ஜீவன்குமாரும் ஆன்லைனில் தயாராக இருந்தார். இதையடுத்து சார்-பதிவாளர் டி.எம்.பிரோஸ் முன்னிலையில் ஆன்லைனில் காணொலி காட்சி மூலம் இருவருக்கும் திருமணம் நடந்தது. அப்போது, மணமகன் சார்பில் அவரது தந்தை தேவராஜன் பதிவேட்டில் கையெழுத்து போட்டார்.
ஆன்லைன் கல்யாணம்
இந்த திருமணத்தை மாவட்ட பதிவாளர் சி.ஜே.ஜான்சன் ஆன்லைன் மூலம் கண்காணித்தார். திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் மணமகள் தன்யாவுக்கு திருமண சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆன்லைனில் திருமணம் நடப்பது கேரளாவில் இதுவே முதல் முறையாகும். கேரள மாடல் திருமணம் ஆக வருங்காலத்தில் ஆன்லைன் திருமணங்கள் இந்தியா முழுவதும் நடந்தாலும் ஆச்சர்யமில்லை.