சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த கனகதுர்கா.. விளையோடி சிவன்குட்டியுடன் மறுமணம்.. யார் இந்த சிவன் குட்டி?
திருவனந்தபுரம் : சபரிமலை தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு சர்ச்சைக்கு மத்தியில் ஐயப்பன் கோவிலுக்குள் நுழைந்த பெண்ணுரிமை ஆர்வலர் கனகதுர்கா, விளையோடி சிவன்குட்டி என்பவரை மறுமணம் செய்துகொண்டுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் சென்ற கனக துர்காவை அவரது குடும்பத்தினரும், கணவரும் ஏற்காத நிலையில், கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார் கனக துர்கா.
இந்நிலையில், கனக துர்காவும், சமூக ஆர்வலரான சிவன்குட்டியும் மலப்புரத்தில் சிறப்புத் திருமணச் சட்டத்தின்படி பதிவுத் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

ஐயப்பன் கோவில் வழக்கு தீர்ப்பு
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று கடந்த 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பளித்தைத் தொடர்ந்து பெண்கள் பலர் கோவிலுக்குள் செல்ல முயன்றனர். இதையடுத்து, கேரளாவில் பெரும் போராட்டங்கள் வெடித்தன. பல்வேறு தடைகளைத் தாண்டி, கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த கனக துர்கா மற்றும் கண்ணூரைச் சேர்ந்த பிந்து ஆகியோர் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி சபரிமலை கோவிலுக்குள் சென்றனர்.

கனக துர்கா
இதையடுத்து, வீட்டுக்குச் சென்ற கனக துர்காவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கனக துர்காவை, அவரது மாமியார் சுமதி கடுமையாகத் தாக்கினார். அதைத்தொடர்ந்து கனக துர்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய கனக துர்காவை வீட்டில் சேர்க்க அவரது கணவர் கிருஷ்ணன் உண்ணி மறுத்துவிட்டார். கனக துர்காவின் சகோதர் பரத் பூஷனும், வீட்டில் சேர்க்க முடியாது என்று மறுத்துவிட்டார்.

மன்னிப்பு கேட்டால் தான்
அதனையடுத்து, கனக துர்கா காவல்நிலையம் சென்று முறையிட்டார். ஐயப்பன் சுவாமி மற்றும் இந்து அமைப்புகளிடம் மன்னிப்பு கேட்டால்தான் வீட்டில் சேர்த்துக்கொள்வோம் என கனக துர்காவின் குடும்பத்தினர் தெரிவித்தனர். நீதிமன்றம் கனக துர்காவுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது. அதன்படி கணவர் வீட்டுக்கு கனக துர்கா சென்றபோது அவர்கள் அந்த வீட்டை காலி செய்துவிட்டு வேறு வீட்டுக்குச் சென்று விட்டனர். கணவர் கைவிட்டதால் கனக துர்கா, விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவர்களுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.

திருமணம்
இதையடுத்து தனியாக வாழ்ந்து வந்த கனக துர்காவுக்கு மலப்புரத்தை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் சிவன்குட்டி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் பொது பிரச்சனைகளில் ஒன்றாக கலந்து கொண்டனர். தொடர்ந்து பழகி வந்ததால் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரின் திருமணம் நேற்று மலப்புரத்தில் நடந்தது. இதில் சிவன் குட்டியின் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர். இவர்களது திருமணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சிறப்புத் திருமணச் சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவன் குட்டி
சிவன்குட்டி, 1990களில் கேரளாவில் செயல்பட்டு வந்த 'அய்யன்காளி படை' என்ற மாவோயிஸ்ட் ஆதரவுக் குழுவில் இருந்தவர். சிவன்குட்டி, அவரது அய்யன்காளி படை தோழர்கள் மண்ணூர் அஜயன், கல்லார பாபு மற்றும் கண்ணங்காடு ரமேஷ் ஆகியோர் 1996 அக்டோபர் 4 அன்று அப்போது நிறைவேற்றப்பட்ட கேரளப் பட்டியல் பழங்குடியினர் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தை உடனடியாக ரத்து செய்யக் கோரி, பாலக்காடு மாவட்ட ஆட்சியர் டபிள்யூ.ஆர்.ரெட்டியை ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக பிணைக் கைதியாக வைத்திருந்தனர். இந்தக் கதை சமீபத்தில் 'பட' என்ற பெயரில் மலையாளத்தில் சினிமாவாகவும் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.