சபரிமலைக்குள் நுழைந்து அதிரடி காட்ட முயன்ற ரெஹானா பாத்திமா.. செக் மோசடி குற்றவாளியாமே!..
திருவனந்தபுரம்: சபரிமலைக்குள் நுழைந்து அதிரடி காட்ட முயன்ற போராளி ரெஹானா பாத்திமா கடந்த 2014-ஆம் ஆண்டு செக் மோசடி வழக்கில் கைதாகி சிறை சென்றவர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சபரிமலைக்கு அனைத்து பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. இதையடுத்து போராளி ரெஹானா பாத்திமா முதலில் சபரிமலைக்குள் நுழைய சென்றார்.
அப்போது ஐயப்ப பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். இந்த சர்ச்சையடுத்து பிஎஸ்என்எல் அலுவலகத்திலிருந்து இடமாற்றப்பட்டார். அது போல் லட்சக்கணக்கான இந்து மக்களுடைய உணர்ச்சிகளை காயப்படுத்தியதாக கேரளா முஸ்லிம் ஜமாத் கவுன்சிலில் இருந்தும் அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.
சர்ச்சை
இவர் குறித்த சர்ச்சைகளை இந்து அமைப்புகள் தோண்டி எடுத்தனர். அதில் பாரம்பரிய முறைக்கு எதிராக கடந்த 2014-ஆம் ஆண்டு கிஸ் ஆப் லவ் என்ற முகாமை கொச்சியில் நடத்தி சர்ச்சையில் சிக்கினார்.
உடலை மறைத்து
அதோடு கடந்த 2018-ஆம் ஆண்டு பேராசிரியர் ஒருவர் பெண்களை தவறாக பேசியதை கண்டிக்கும் வகையில் மேலாடையின்றி தர்ப்பூசணி பழங்களை கொண்டு தனது முன்பக்க உடலை மறைத்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகியது.
பாத்திமா
இந்த நிலையில் இவர் செக் மோசடி குற்றவாளி என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு அனில் குமார் என்பவர் பாத்திமாவுக்கு ரூ 2 லட்சம் கடனாக வழங்கியுள்ளார். அதை காசோலையாக பாத்திமா திருப்பி செலுத்தினார்.
பாத்திமா மீது புகார்
அனில் குமார் அதை வங்கியில் செலுத்த பணமில்லை என கூறி அவருக்கே திரும்ப வந்துவிட்டது. இதையடுத்து தாம் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அனில் குமார், பாத்திமா மீது புகார் அளித்துள்ளார்.
நீதிமன்றத்தில்
இதையடுத்து பாத்திமா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆலப்புழா குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. அப்போது பாத்திமா குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். எனினும் குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஹைகோர்ட் உறுதி செய்தது. இதனால் அவர் ஒரு நாள் சிறை தண்டனைக்காகவும் , ரூ 2.1 லட்சம் அபராதம் செலுத்துவதற்காகவும் ஆலப்புழா நீதிமன்றத்தில் பாத்திமா ஆஜரானார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.