செவ்வாய் கிரகத்திலிருந்து வந்தவர்களுக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை.. ரேவதி பொளேர்!
மோகன்லால் கருத்துக்கு நடிகை ரேவதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
திருவனந்தபுரம்: செவ்வாய் கிரகத்திலிருந்து வந்தவர்களுக்கு எல்லாம் மீடூ பற்றி தெரியாதுதான் என்று நடிகர் மோகன்லாலை நடிகை ரேவதி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே மீடூ விவகாரம் தலைதூக்கி உள்ளது. குறிப்பாக சினிமா உலகை சேர்ந்தவர்கள் மீடூவில் தங்கள் பாலியல் இன்னல்களை விலாவரியாக தெரிவித்து வருகிறார்கள்.
சில தினங்களுக்கு முன்பு கூட, மலையாள பட உலகை சேர்ந்த நடிகைகளும் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
ஆவேச பேட்டி
குறிப்பாக மலையாள பெண் சினிமா கலைஞர்கள் சங்கத்தை சேர்ந்த நடிகைகள் ரேவதி, ரீமா கல்லிங்கல், பத்மபிரியா, பார்வதி, ரம்யாநம்பீசன் ஆகியோர் கொச்சியில் நிருபர்களிடம் தங்களின் ஆதங்கத்தையும், ஆத்திரத்தையும் கண்ணீருடன் கொட்டினார்கள்.
மீடூ ஒரு ஃபேஷன்
இந்நிலையில், அபுதாபியில் ஒரு விழாவுக்கு நடிகர் மோகன்லால் சென்றிருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மீடூவை ஒரு இயக்கமாகக் கருதமுடியாது. மீடூ என்பது ஒரு ஃபேஷன் ட்ரெண்ட்டைப் போன்றதுதான்" என்று சொல்லி இருந்தார்.
இது ஒரு ட்ரெண்டு
இதுபோலவே, இன்னொரு பேட்டியிலும் மோகன்லால், "மலையாள திரையுலகில் இப்படி பாலியல் பிரச்சனைகள் எதுவுமே இல்லை. புதிதாக சொல்லி பிரச்சனைகளை உருவாக்க வேண்டிய அவசியமில்லை. இந்த மீடூ ட்ரெண்டெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். ஆண்கள்கூட மீடூ புகார்களோடு வர வேண்டும்" என்று சிரித்து கொண்டே அந்த பேட்டியில் சொல்லி இருந்தார்.
|
குற்றவாளியே திலீப்தான்
மோகன்லாலின் இந்த பேச்சிற்கு நடிகை ரேவதி மறைமுகமாக தற்போது பதிலடி தந்துள்ளார். ஏற்கனவே நடிகர் சங்கம் "அம்மா" மீது தனது அதிருப்தியை தெரிவித்தவர் ரேவதி. முதல் குற்றவாளியே நடிகர் திலீப்தான் என பகிரங்கமாக சொன்னவர். இப்போது மோகன்லால் இப்படி சொன்னதும் இதற்கு சுளீரென தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.
செவ்வாய் கிரகவாசிகள்
அதில், "ஒரு நடிகர் மீ-டூ என்பது ட்ரெண்ட் என்று சொல்கிறார். இப்படி மீடூ பற்றி தெரியாதவர்களுக்கு எப்படி அதை புரிய வைப்பது? நடிகை அஞ்சலி மேனன் சொன்னதுபோல, செவ்வாய்க்கிரகத்திலிருந்து வந்தவர்களுக்கு பாலியல் அத்துமீறல்களை பற்றியும், அத்துமீறல்களை வெளியில் சொல்வதால் ஏற்படும் மாற்றங்களைப் பற்றியும் எதுவுமே தெரியாது" இவ்வாறு ரேவதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.