என்னங்க நடக்குது.. நம்பவே முடியல.. கடிதம் எழுதியதற்காக வழக்கா.. அடூர் கோபாலகிருஷ்ணன் வேதனை
திருவனந்தபுரம்: அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு, ஜனநாயக முறையில், அரசுக்கு எதிராக அல்லாமல், அறிவுரை கூறும் வகையில்தானே நாங்கள் பிரதமருக்கு கடிதம் எழுதினோம். இதற்காக எங்கள் மீது வழக்கு என்பதை நம்பவே முடியவில்லை. என்ன நடக்குதுன்னே தெரியலை என்று பிரபல இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் வேதனை வெளியிட்டுள்ளார்.
நாட்டில் பசு காவலர்களால் நடைபெறும் கொலைகள் அதிகரித்து விட்டன. ஜெய்ஸ்ரீராம் என்ற முழக்கம் வன்முறைக்கு வித்திடுகிறது. முஸ்லீம்கள், தலித்துகள், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள், கொலைகள் அதிகரித்து விட்டன. இவையெல்லாம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதற்கு நீங்கள் ஆவண செய்ய வேண்டும்.. என்று பல்வேறு கோரிக்கைகள் வைத்து இந்தியத் திரையுலகின் பிதாமகர்களான மணிரத்தினம், ரேவதி, அடூர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 50 கலைஞர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
இந்தக் கடிதத்தை வைத்து இப்போது பீகாரில் ஒரு பரபரப்பு கிளம்பியுள்ளது. அங்குள்ள வக்கீல் ஒருவர், முசாபர் நகர் மாவட்ட கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், இந்த 50 பேரும் தேசத்தை அவமானப்படுத்தி விட்டனர். இவர்கள் மீது தேச துரோக வழக்கு தொடரப்பட வேண்டும் என்று அவர் கோரியிருந்தார். இதை விசாரித்த கோர்ட், 50 பேர் மீதும் தேச துரோக சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேசத்திற்கு அதிர்ச்சி
இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன. படைப்பாளிகள் உள்ளிட்ட கலையுலகினரும் அதிர்ச்சி வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து அடூர் கோபாலகிருஷ்ணன் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
அடூர் வேதனை
நமக்கு என்ன ஆச்சு.. என்ன நடக்கிறது.. இந்த செய்தியை என்னால் இன்னும் கூட நம்ப முடியவில்லை. ஒரு சாதாரண கடிதத்தை வைத்து தேச துரோக வழக்கைப் பதிவு செய்ய கோர்ட் உத்தரவிடும் என்பதை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. அந்தக் கடிதத்தை சரியாக படித்துப் பார்க்கவில்லையோ என்று நான் கருதுகிறேன்.
இது எப்படி தேச விரோதமாகும்
நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம். ஒரு அரசு மீது விமர்சனம் வைத்தால் அது எப்படி தேச விரோத செயலாகும். நமது ஜனநாயகத்தை மதித்து, அரசியல் சாசனத்தை மதித்துத்தான் அந்தக் கடிதத்தை நாங்கள் எழுதினோம். அந்தக் கடிதத்தில் உள்ளவை பல்வேறு கருத்துக்களின் தொகுப்புதான். அரசை எதிர்த்து நாங்கள் எழுதவில்லை. ஜனநாயகத்தை மதித்துதான் எழுதினோம்.
நாங்கள் கலைஞர்கள்
நாம் வாழும் ஜனநாயக நாட்டில் பல்வேறு விதமான கருத்துக்கள் இருக்கத்தான் செய்யும். அவற்றைத் தொகுத்துத்தான் அரசிடம் கொண்டு சென்றோம். நாங்கள் கலைஞர்கள்.. எங்களுக்கு அரசியல் தேவையில்லை. எங்களது கோரிக்கையை, எண்ணத்தை தேச துரோகமாக பார்த்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. இந்த நாட்டில் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருக்கும் வரை, ஜனநாயகம் இருக்கும் வரை, இந்த நாட்டை வழிநடத்தும் தகுதி, பங்கு எங்களுக்கு இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம்.
அது ஜனநாயகமே இல்லை
கருத்துப் பரிமாற்றம் இல்லாமல் ஜனநாயகம் இல்லை. கருத்து வேறுபாடு இல்லாவிட்டால் அது ஜனநாயகமே அல்ல. ஒருவர் கொடூரமாக கொல்லப்படுகிறார். ஏழை மக்கள் அநியாயமாக கொல்லப்படுகிறார்கள். அடித்துக் கொல்லப்படுகிறார்கள். பசு மாட்டைக் கொல்லப் போவதாக சந்தேகித்துக் கொல்லப்படுகிறார். இதையெல்லாம் நாங்கள் புதிதாக கண்டுபிடிக்கவில்லை. நம் கண் முன்பாகவே எல்லாம் நடக்கின்றன. ஆனால் யாரும் கவனிக்காமல் இருக்கிறோம் என்று வேதனையுடன் குறிப்பிட்டார் அடூர் கோபாலகிருஷ்ணன்.
சர்வாதிகாரத்தை நோக்கி.. ராகுல் காந்தி
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், பிரதமருக்கு எதிராக யார் எது பேசினாலும் அவர்களை சிறையில் அடைப்பதே பாஜக அரசின் வாடிக்கையாக மாறியுள்ளது. நாட்டில் என்ன நடக்கிறது என்று அனைவருக்குமே தெரியும். இது ரகசியம் அல்ல. ஏன், மொத்த உலகத்துக்குமே தெரியும். நாம் சர்வாதிகாரப் பாதைக்குப் போய்க் கொண்டிருக்கிறோம். அது மட்டும் தெளிவாகப் புரிகிறது என்றார் ராகுல் காந்தி.